இந்தியப் பாரம்பரிய கர்நாடக சங்கீதத்தில் மற்ற இந்திய, மலாய், சீனம், மேற்கத்தியப் பகுதிகளின் பாரம்பரிய, சமகால இசை வகைகளை உட்புகுத்தி, தனித்துவமான இசைத் தொகுப்பைப் படைத்துள்ளனர் ‘ஸ்வரிதம்’ இசைக் குழுவினர்.
முப்பதுக்கும் மேற்பட்ட கலைஞர்களுடன் மேடையேறவுள்ள இந்த இசைநிகழ்ச்சியில் மணல் கலை புதுமையான ஒன்றாக அமையவிருக்கிறது.
இந்தியக் கலைவிழாவின் ஓர் அங்கமான ‘கலா உற்சவம் 2025’ஐ முன்னிட்டு ‘சமுத்ரா’ என்னும் இசை நிகழ்ச்சி நவம்பர் 21 இரவு 7.30 மணிக்கு எஸ்பிளனேட் கலை அரங்கில் நடைபெறவுள்ளது.
இவ்வாண்டு ‘ஸ்வரிதம்’ இசைக்குழு தனது பத்தாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில் இந்த இசைநிகழ்ச்சி அமைவது மற்றுமொரு சிறப்பம்சம்.
“ஒரு சிறு குழுவாகத் தொடங்கியது, பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இன்னும் துணிவுடன் புதிய படைப்புகளை அரங்கேற்றும், கற்பிக்கும், மேலும் பெரிய கேள்விகளை எழுப்பும் ஒரு சமூகமாக உருவெடுத்துள்ளோம்,” என்றார் தபேலா இசைக் கலைஞரும் ‘ஸ்வரிதம்’ இசைக் குழுவின் நிறுவனருமான நவாஸ் மிராஜ்கர்.
கலைஞர்களாக ஒருமித்த முயற்சியுடன் இசையைப் போன்ற சமுத்திரமாக உருவெடுத்து, பல்லின சமுதாயத்தில் அனைவர்க்கும் ஒரு இடமுண்டு என்பதை ஒரு நினைவூட்டலாக இந்த இசை நிகழ்ச்சி அமையவிருக்கிறது. பொதுமக்கள் இதுவரை பேராதரவு அளித்து வந்துள்ளதையும் ஏற்கெனவே கேட்டுப் பழக்கப்பட்ட இசையைத் தாண்டி புதுமையான படைப்புகளை விரும்பும் துணிவை வெளிப்படுத்தி வந்துள்ளதையும் திரு நவாஸ் சுட்டினார்.
ஒவ்வொரு ஸ்வரிதம் இசை நிகழ்ச்சியும் தனித்துவமிக்கது. இம்முறை அந்நிகழ்ச்சி இதுவரை இல்லாத அளவில் அதிகமான இசைக்கலைஞர்களுடனும் இசையமைப்பாளர்களுடனும் மேடையேறவுள்ளது.
“ஓர் இசை நிகழ்ச்சி என்பதைத் தாண்டி, ஒரு கடலில் பயணிப்பது போன்ற அனுபவத்தை மக்களுக்கு வழங்க விரும்புகிறோம்,” என்றார் கடம், கஞ்சிரா, மிருதங்கம் போன்ற பாரம்பரிய இசைக்கருவிகளுடன் மின்னணு தாள வாத்தியத்தையும் இசைத்து பரவசத்தில் ஆழ்த்தவிருக்கும் இசைக்கலைஞர் மஹேஷ் பரமேஸ்வரன்.
தொடர்புடைய செய்திகள்
மற்ற இன, மொழியால் வேறுபட்ட இசைக்கலைஞர்களுடன் வாசிக்கும்போது ஒருவர்மீது ஒருவர் கொண்டுள்ள புரிந்துணர்வு, மரியாதை ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
“பொதுவாக, கோவில் கச்சேரிகளில் வாசிக்கப்படும் வீணை இம்முறை சற்று புதுமையான படைப்பில் அங்கம் வகிக்கிறது,” என்றார் வீணைக் கலைஞர் மாதவன் கலைச்செல்வன்.
‘கலையை மக்களுக்குக் கொண்டுசேர்ப்பது மட்டும் ஒரு கலைஞனின் பணியன்று. கற்றது கையளவு அல்ல, கற்றது கடல் துளி அளவுதான். நம்மைச் சுற்றி எப்படிக் கடல் உள்ளதோ அதே போல இந்த இசைநிகழ்ச்சியில் பல்லின கலாசாரங்கள் உள்ளன. மொழியைக் கொண்டு இசையை விவரிக்க இயலாது. அதை உணர வேண்டும், புரிந்துகொள்ள வேண்டும். எனவே, இந்த அனுபவம் எங்களுக்கே ஒரு நினைவூட்டலாக அமைந்தது,” என்றார் திரு மாதவன்
இந்த இசைநிகழ்ச்சியில் இசைக்கருவிகள் மட்டுமல்லாமல் அலைகளும் இசையாய் மாறி மக்கள் நீரொலிச்சூழலில் மூழ்கவும், மணல் ஓவியத்தைக் கண்முன் காணவும் வாய்ப்பளிக்கிறது.

