நாகூர் சங்கம் (சிங்கப்பூர்) ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29), பெக் கியோ சமூக மன்றத்தில் நடைபெற்ற பூப்பந்துப் போட்டி சமூகத் தலைவர்களின் பாராட்டுகளைப் பெற்றது.
இந்தப் போட்டியில் சிங்கப்பூரில் இயங்கும் ஏறத்தாழ 20 அமைப்புகளைச் சேர்ந்த 32 அணிகள் உற்சாகமாகப் பங்கேற்றன.
கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்ட வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹமீது ரசாக் வெற்றியாளர்களுக்குப் பரிசளித்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மினி என்வைரன்மெண்ட் சர்வீஸ் குழுமத் தலைவர் S.M. அப்துல் ஜலீல் கலந்துகொண்டார்.
நாகூர் சங்கத்தின் தலைவர் முஹம்மது அசீம் தலைமையில் பூப்பந்துப் போட்டி சிறப்பாக நடைபெற்றது. “இந்த சுழல் கிண்ணப் போட்டியை ஆண்டுதோறும் மேலும் மேம்பட்ட வடிவில் நடத்த ஆவலாக உள்ளோம்,” என்றார் அவர்.
போட்டியில் முதல் இடம் பெற்ற BSA கிரசெண்ட் முன்னாள் மாணவர்கள் சங்க (சிங்கப்பூர்) அணியின் முஹம்மது அர்ஷத், ஃபாய்ஜ் அகமது இருவரும் சுழல் கிண்ணத்தை வென்றனர்.
ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க (சிங்கப்பூர் கிளை) அணியின் ஹபிபுல்லாஹ், சுஜாவுதீன் இருவரும் இரண்டாம் இடத்தைப் பிடித்தனர்.
சிங்கப்பூர் நாணய மாற்றுச் சங்க அணியின் உவைஸ், கரீம் இருவரும் மூன்றாம் இடத்தையும் முஸ்லிம் நலவாழ்வு மன்றம் சிங்கப்பூர் (MWAS) அணியைச் சேர்ந்த நஸ்ருல்லாஹ், ஈத்ரீஸ் இருவரும் நான்காம் இடத்தையும் பெற்றனர்.
தொடர்புடைய செய்திகள்
இறுதிப் போட்டியில் மிகவும் நேர்த்தியுடன் விளையாடிய நான்கு வீரர்களில், அர்ஷத், ஃபாய்ஜ் அகமது, ஹபிபுல்லாஹ் மூவரும் ஆக்டிவ் நோவோ பூப்பந்துச் சங்கத்தில் வழக்கமாகப் பயிற்சி பெறுபவர்கள் என்று கூறப்பட்டது.
இந்தப் போட்டி, சமூக ஒற்றுமையையும் உடற்பயிற்சி கலாசாரத்தையும் ஊக்குவிக்கும் முன்னுதாரண நிகழ்ச்சியாக அமைந்தது.