புதுடெல்லி: காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையை எதிர்த்தரப்பினர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அந்த அறிக்கை குறித்து நேரடியாக விவாதிக்கத் தயாரா என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சவால் விடுத்துள்ளார்.
பாஜகவின் கொள்கைகள் வெயிலை விட கடுமையானவை என்றும் அவை மக்களைச் சுட்டெரித்து வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு தாம் கடிதம் அனுப்பி இருப்பதாக தெரிவித்துள்ள காங்கிரஸ் தேசியத் தலைவர் கார்கே, அருணாச்சல பிரதேசத்தில் சீன ராணுவத்தின் ஊடுருவல் குறித்து தமது கவலையைப் பதிவு செய்துள்ளார்.
“தற்போது உத்தராகண்ட், லடாக், அருணாச்சல பிரதேசத்தில் சீன ராணுவத்தினர் திட்டமிட்டு ஊடுருவி வருகின்றனர். பெரும் தளவாடங்களைக் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இந்த ஊடுருவல் தொடர்பாக மத்திய அரசு எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது?
“சீனப் பொருள்களின் இறக்குமதியை அதிகரித்ததுதான் பாஜக அரசு சீனத் தரப்பின் மீது மேற்கொள்ளும் நடவடிக்கையா, இதுதான் உங்கள் தேசப்பற்றா?,” என்று கேள்விகளை அடுக்கி உள்ளார் மல்லிகார்ஜுன கார்கே.
மக்கள்தொகை அடிப்படையில் குறிப்பிட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்று கேட்டுள்ள அவர், பொதுமேடைகளில் பிரதமர் மோடி வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசி வருகிறார்,” எனச் சாடினார்.
வெயிலைவிட உங்களது கொள்கைகள்தான் மக்களை சுட்டெரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், கடந்த 1947ஆம் ஆண்டு முதல் இன்று வரை இட ஒதுக்கீட்டை ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்த்தது ஆர்எஸ்எஸ், பாஜகதான் என்று தெரிவித்துள்ளார்.
“காங்கிரஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை பாஜக சுமத்தி வருகிறது. அத்தகைய குற்றச்சாட்டுகள் பற்றி எங்களுடன் விவாதிக்கத் தயாரா?
“காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தொடர்பாக பொய்களைக் கூறி வருகிறீர்கள். வாக்குக்காக பொய்களுடன் பிரிவினைவாதம் பேசும் பிரதமராக மட்டுமே உங்களை மக்கள் நினைவுகூர்வர்,” என்று மல்லிகார்ஜுன கார்கே தமது கடிதத்தில் பகிரங்கமாகச் சாடி உள்ளார்.
தைவான் பள்ளத்தாக்கில் 20 இந்தியர்கள் உயிர்த்தியாகம் செய்த போதும் சீனா என்ற வார்த்தையை ஒருமுறைகூட பயன்படுத்தவில்லை என்றும் கார்கே சுட்டிக்காட்டி உள்ளார்.