ஆக்ரா: மாணவியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததன் தொடர்பில் ஆக்ராவில் சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏறக்குறைய 16 மாணவிகள் பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
புகாரைத் தொடர்ந்து சாமியார் சைதன்யானந்தாவை ஆக்ராவில் புதுடெல்லி காவல்துறையினர் கைது செய்தனர் என்று இந்து தமிழ் திசை தகவல் வெளியிட்டிருந்தது. புதுடெல்லி வசந்த் கஞ்ச்சில், ‘ஸ்ரீ சாரதா இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மேனேஜ்மென்ட்’ என்ற உயர்கல்வி நிறுவனம் அமைந்துள்ளது. கர்நாடக மாநிலம் சிருங்கேரி சாரதா பீடத்தின் தலைமையில் இயங்கும் இந்த நிறுவனத்தில் டெல்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவியர் படிக்கின்றனர்.
இந்த நிலையில் டெல்லி கிளையின் மேலாளராக இருந்த பார்த்தசாரதி என்ற சைதன்யானந்த சரஸ்வதி சாமியார், 17 மாணவியரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்பட்டது.
இதையடுத்து, அவர் மீது பாலியல் துன்புறுத்தல் உட்பட பல்வேறு பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
பார்த்தசாரதி என்ற சைதன்யானந்தா தலைமறைவானார்.
அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை (செப்டம்பர் 28) ஆக்ராவில் சிக்கினார்.
உடனே அவரை காவல்துறை கைது செய்தது.
தொடர்புடைய செய்திகள்
முன்னதாக முன்பிணை அளிக்க வேண்டும் என்று சைதன்யானந்த சரஸ்வதி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

