புனே: நீண்ட நேரம் தூங்கும் போட்டியில், மகாராஷ்டிராவின் புனே நகரைச் சேர்ந்த பூஜா மாதவ் என்ற பெண்மணி முதலிடம் பெற்றுள்ளார். அவருக்கு ரூ.9.1 லட்சம் பரிசு கிடைத்தது.
தனியார் நிறுவனம் நடத்திய இந்தப் போட்டியில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
பல்வேறு கட்டங்களுக்குப் பிறகு, அவர்களில் 14 பேர் இறுதிச்சுற்றுக்குத் தேர்வாகினர்.
“நாள்தோறும் இரவு ஒன்பது மணிநேரம் நன்றாக உறங்கி எழுவது தொடர்பாக, போட்டியில் பங்கேற்றவர்களுக்கு 60 நாள்கள் தூக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. போட்டியாளர்களின் தூக்க முறையில், நல்ல பழக்க வழக்கங்கள், அவற்றை ஊக்குவிக்கும் பயிலரங்குகள், தூக்கம் தொடர்பான நடைமுறைப் பயிற்சிகள், சிறு போட்டிகள் ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டன.
“தூக்கத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்தப் போட்டியை நடத்தினோம்,” என்று போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இறுதியில், இந்த விழிப்புணர்வு போட்டி, பயிற்சியில் 91.36 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்த பூஜா மாதவ், ‘ஸ்லீப் சாம்பியன் ஆஃப் தி இயர்’ என்ற பட்டத்தை வென்றார்.
அவருக்கு ரூ.9.1 லட்சம் பரிசுத்தொகை கிடைத்தது.
மற்ற போட்டியாளர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.