புதுடெல்லி: இந்தியாவில் விமானத்தைப் போலவே ரயிலில் பயணம் செய்யும் அனைவருக்கும் சுமை கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது.
விமானப் பயணிகள் குறிப்பிட்ட எடைக்குமேல் சுமைகள் கொண்டுவர கட்டணம் வசூலிக்கப்படுவதுபோல் ரயில் பயணிகளிடமும் வசூலிக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது.
இந்தியா முழுவதிலும் ரயில்களில் செல்லும் பலர் அதிகச் சுமைகளை எடுத்துச் செல்வது வழக்கம். இதில், அவர்கள் உடைமைகள் தவிர மற்ற வீட்டு உபயோகப் பொருள்கள், வர்த்தகம் செய்வதற்குத் தேவையான பொருள்கள் உள்ளிட்டவை அடங்கும்.
தற்போது வீட்டு உபயோகப் பொருள்களைத் தவிர்த்து வியாபாரப் பொருள்களுக்கு மட்டும் கட்டணம் விதிக்கப்படுகிறது.
இதற்காக நாட்டின் அனைத்து ரயில் நிலைய நுழைவாயில்களிலும் மின்னணு எடை இயந்திரங்கள் வைக்கப்பட உள்ளன.
இவற்றில் எடை போடப்பட்ட பிறகே சுமைகள் ரயில் தளமேடை உள்ளே அனுமதிக்கப்படும். ரயில்களில் முன்பதிவு இல்லாப் பொதுப் பெட்டிகளில் செல்லும் பயணிகளுக்குத் தலா 35 கிலோ சுமை கொண்டுவர அனுமதி வழங்கப்படும்.
ரயில்களின் அனைத்து வகைப் பெட்டிகளிலும் சுமைகளை வைப்பதற்காகத் தனி இடவசதியும் செய்யப்படவுள்ளது.
ஓடும் ரயில்களில் பயணச்சீட்டுப் பரிசோதனை மேற்கொள்வதுபோல், சுமைகளின் எடையும் தோராயமாகச் சோதிக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
இந்தப் புதிய மாற்றம் சோதனை அடிப்படையில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

