சென்னை: தமிழக அரசின் இந்த ஆண்டுக்கான (2025) ‘தகைசார் தமிழர்’ விருதுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசு வெள்ளிக்கிழமை (ஜூலை 4) இதனை அறிவித்தது.
முன்னதாக, தமிழகத்துக்கும் தமிழின வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், ‘தகைசால் தமிழர்’ விருதை உருவாக்கவும் விருதாளரைத் தேர்வு செய்ய ஒரு குழுவை அமைக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021ஆம் ஆண்டு உத்தரவிட்டார்.
அதன்கீழ், கடந்த நான்கு ஆண்டுகளில் திரு சங்கரய்யா, திரு ஆர்.நல்லகண்ணு, ஆசிரியர் கி.வீரமணி, முனைவர் குமரி அனந்தன் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
இந்த ஆண்டுக்கான விருதாளரைத் தேர்வு செய்யும் பொருட்டு, தேர்வுக் குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை, தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் மூத்த அரசியல் தலைவரும், மணிச்சுடர் இதழின் ஆசிரியரும், இந்திய அரசியல் பற்றிய ஆழமான புரிதலுடன், சமூக நல்லிணக்கத்துக்காகத் தொடர்ந்து உழைப்பவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதை வழங்க முடிவு செய்யப்பட்டது.
பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியப் பொதுச் செயலாளராகவும், தமிழ் மாநிலத் தலைவராகவும் இருந்தவர். மனித நேய மாண்பாளர், பழகுவதற்கு இனிய பண்பாளர், அறிவார்ந்த சொற்பொழிவாளர், மனிதநேயத்துக்கும் மதநல்லிணக்கத்துக்கும் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர் எனப் புகழப்படுபவர்.
கோவையில் 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழகத்துக்கும், அரபு நாடுகளுக்கும் உள்ள தொடர்புகள் பற்றிய ஆய்வுக் கட்டுரை வழங்கியவர்.
எட்டாண்டுகள் தொடர்ந்து தாருல் குர்ஆன் இதழில் ‘தமிழர்க்கு இஸ்லாம் வந்த மதமா? சொந்தமா?’ எனும் தலைப்பில் தொடர் கட்டுரையை எழுதியவர்.
வாழும் நெறி, குர்ஆனின் குரல், இஸ்லாமிய இறைக்கோட்பாடு உட்பட ஆறு நூல்களை எழுதியவர். திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் 15 ஆண்டுகள் வரலாற்றுத் துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
‘தகைசால் தமிழர் விருது’க்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் வருகிற ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.