புதுடெல்லி: இந்தியாவின் ஆக அதிக எடைகொண்ட செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
மொத்தம் 4,410 கிலோ எடைகொண்ட ‘சிஎம்எஸ்-03’ செயற்கைக்கோள், ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ‘எல்விஎம்-3’ உந்துகணை மூலம் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.26 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.
அதிக எடைகொண்ட செயற்கைக்கோளைச் சுமந்துகொண்டு விண்ணில் பாய்ந்த இந்த உந்துகணை ‘பாகுபலி’ என்று குறிப்பிடப்படுகிறது.
இந்தச் செயற்கைக்கோள் கடற்படை, ராணுவப் பயன்பாட்டுக்கானது என்றும் நாட்டின் தகவல் தொடர்புச் வசதிகளை மேம்படுத்த இஸ்ரோ சாா்பில் இதுவரை 48 செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொலைத்தொடர்புச் செயற்கைக்கோளான ‘சிஎம்எஸ்-03’ அதன் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
இதுவரை ஏவப்பட்டதில் இதுதான் அதிகபட்ச எடை கொண்ட தகவல் தொடர்புச் செயற்கைக்கோள் என்றும் அதில் விரிவுபடுத்தப்பட்ட தொழில்நுட்ப வசதிகள் உள்பட பல்வேறு நவீன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்றும் தெரியவந்துள்ளது.
இந்தச் செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்ட நிலையில், இந்தியக் கடற்படை, ராணுவப் பணிகளுக்காக அதிகம் பயன்படுத்தப்படும்.

