புதுடெல்லி: அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா மாநிலங்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (செப்டம்பர் 22) பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் ரூ.5,100 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 21) வெளியிட்ட அறிக்கை மூலம் தகவல் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களிடம் உரையாற்றுவார் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து, அருணாச்சலப் பிரதேச பயணத்தின்போது, அம்மாநிலத்தின் பரந்த நீர்மின்சார ஆற்றலைப் பயன்படுத்திக்கொள்ள இட்டாநகரில் ரூ. 3,700 கோடி மதிப்புள்ள இரண்டு பெரிய நீர்மின் திட்டங்களுக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
அதன்படி, 240 மெகாவாட் ஆற்றலில் ஹியோ நீர்மின் திட்டம் மற்றும் 186 மெகாவாட் ஆற்றலில் டாட்டோ-I நீர்மின் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட உள்ளன. இந்த இரண்டு திட்டங்களும் அருணாச்சலப் பிரதேசத்தின் சியோம் ஆற்றில் துணைப் படுகையில் உருவாக்கப்படும்.
9,820 அடி உயரத்தில் தவாங்கில் ஓர் அதிநவீன மாநாட்டு மையத்துக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். தவாங்கின் எல்லை மாவட்டத்தில் 9,820 அடி உயரத்தில் அமையும் இந்த மையம் தேசிய மற்றும் அனைத்துலக மாநாடுகள், கலாசார விழாக்கள் மற்றும் கண்காட்சிகளை நடத்துவதற்கான அனைத்து வசதிகளையும் கொண்டதாக இருக்கும். இது, அப்பகுதியின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதுடன் அங்குள்ள மக்களின் கலாசாரம் பற்றியும் மற்றவர்கள் அறிந்துகொள்ள வழிவகுக்கும்.
சுகாதாரம், தீயணைப்புப் பாதுகாப்பு, பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகள், இணைப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு உதவும் வகையில் ரூ.1,290 கோடி மதிப்புள்ள பல முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
திரிபுராவுக்கு புறப்பட்டுச் செல்லும் பிரதமர் மோடி, மாதா திரிபுர சுந்தரி கோயிலில் சாமி தரிசனம் செய்ய இருப்பதாகப் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. அக்கோயிலின் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், புதுப்பொலிவுடன் காணப்படும் திருத்தலத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மிகப் பழமையான அக்கோயில் 51 சக்திப் பீடங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

