சண்டிகர்: ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ என்றழைக்கப்படும் சில நாள்கள் நீடித்த இந்தியா - பாகிஸ்தான் போரின்போது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ வீரர்களுக்கு உணவளித்த 10 வயது சிறுவனின் கல்விக்கான செலவை ஏற்றுக்கொள்வதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது ஷ்வான் சிங் என்ற அச்சிறுவன் தாரா வாலி கிராமத்தில் ராணுவ வீரர்களின் பணிகளில் கைகொடுத்து வந்தார்.
இந்திய, பாகிஸ்தான் தரப்புகளுக்கிடையே துப்பாக்கிச்சூடு நடந்தபோது அவர் தண்ணீர், ஐஸ், தேநீர், பால், லசி போன்றவற்றை ராணுவ வீரர்களுக்கு எடுத்துச் சென்றார்.
சிறுவனின் துணிச்சலையும் துடிப்பையும் அங்கீகரிக்கும் வகையில் அவரின் கல்விச் செலவு முழுவதையும் தாங்கள் ஏற்றுக்கொள்வதாக இந்திய ராணுவத்தின் ‘கோல்டன் ஏரோ’ பிரிவு தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை (ஜூலை 19) ஃபெரோஸபூர் ராணுவத் தளத்தில் நடைபெற்ற சடங்கு ஒன்றில் லெஃப்டினண்ட் ஜெனரல் குமார் கத்தியார் சிறுவனை கெளரவித்தார் என்று என்டிடிவி ஊடகம் தெரிவித்தது.
ஷ்லானின் கதை, நாடு முழுவதும் அமைதியாக செயல்பட்டுவரும் ‘வீரர்களுக்கு’ அங்கீகாரமும் ஆதரவும் வழங்க வேண்டும் என்பதை நிளைவூட்டுவதாக இந்திய ராணுவம் குறிப்பிட்டுள்ளது.

