தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

தமிழர்களுக்கும் பீகார் மக்களுக்கும் பகை உண்டாக்குவது அற்ப அரசியல்: ஸ்டாலின்

1 mins read
ee94e25a-02e4-4580-a781-e7077620461f
பிரதமர் நரேந்திர மோடி, பீகார் மக்களைத் தமிழக அரசு துன்புறுத்துவதாகக் கூறியிருந்தார். அதைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வன்மையாகக் கண்டித்துள்ளார். - கோப்புப் படம்: ஊடகம்

சென்னை: பீகாரில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, திமுக ஆளும் தமிழ்நாட்டில் திமுகவினர் பீகாரைச் சேர்ந்த உழைக்கும் மக்களைத் துன்புறுத்துவதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

அதைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்குமான பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே நரேந்திர மோடி அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தனது பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக்கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

“ஒடிசா, பீகார் என்று எங்கு சென்றாலும், பாஜகவினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்குத் தமிழ்நாட்டு மக்களின் முதல்வர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

“பன்முகத்தன்மை கொண்ட, வேற்றுமையில் ஒற்றுமையைக் காணும் பெருமைமிக்க இந்தியாவில், இந்து, முஸ்லிம் மக்களுக்கு இடையே பகையை வளர்ப்பது, தமிழர்களுக்கும் பீகார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்துகொள்வது போன்ற அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, நாட்டு நலன் மீது பிரதமரும் பாஜகவினரும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்,” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்