அமராவதி: தனது சொந்த சட்டமன்றத் தொகுதியான குப்பத்தை தொழில் மையமாக மாற்றும் வகையில், ஏழு புதிய தொழிற்சாலைகளுக்கு காணொளிக் காட்சிமூலம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டினார்.
இந்தத் தொழிற்சாலைகள் ரூ.2,203 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளன. இந்த முதலீட்டின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏறக்குறைய 24,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
அமராவதியில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்தபடியே, சித்தூர் மாவட்டம், குப்பம் தொகுதியில் ஒரே நேரத்தில் ஏழு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி, தொகுதி மக்கள், தொழிற்சாலை நிர்வாகிகளுடன் சந்திரபாபு நாயுடு உரையாடினார்.
“ஆந்திரா-தமிழகம்-கர்நாடக மாநிலங்களின் எல்லையில் குப்பம் தொகுதி அமைந்துள்ளது. ஆதலால், இங்கு தொழிற்சாலைகள் அமைப்பதன் மூலம் மூன்று மாநிலங்களுக்கும் இடையிலான போக்குவரத்து வசதி மிகச் சுலபமாக மாறிவிடும். விரைவில் குப்பத்தில் விமான நிலையமும் வர உள்ளது.
“குப்பம் ரயில் நிலையமும் விரிவாக்கப்பட்டு, அனைத்துலகத் தரத்துக்கு நவீனமயமாக்கப்படும். சாலை, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து வசதிகள்மூலம், இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருள்களை ஏற்றுமதி செய்யச் சிறந்த வாய்ப்புகள் உருவாகும்.
“விரைவில் குப்பம் தொகுதியில் ரூ.6,300 கோடியில் மேலும் எட்டு தொழிற்சாலைகள் வர உள்ளன என்று குறிப்பிட்டவர், இப்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ள ஏழு தொழிற்சாலைகள் மூலம் 24,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்,” என்றார்.
“தொழில்துறை வளர்ச்சியுடன் கல்வி, சுகாதார மேம்பாட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். குப்பம் ஒரு முக்கிய கல்வி மையமாக மேம்படுத்தப்படும். இங்கு ஏற்கெனவே மருத்துவம், பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் திராவிடப் பல்கலைக்கழகம் போன்றவை செயல்படுகின்றன.
“இங்கிருந்து தரமான பழங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
“வீடுகளுக்கே சென்று மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. ஏஐ தொழில்நுட்பம் வருங்காலத்தில் மருத்துவ ஆலோசகராகவும் மாறும்,” என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார்.

