அடிலெய்ட்: ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் பகுதியில் 23 வயது இந்திய இளையர் ஒருவர் இனவாதத் தாக்குதலுக்கு ஆளானதாக ‘த இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த வாரம் நடந்த இச்சம்பவம், வாகன நிறுத்தம் தொடர்பான தகராறு என்றும் அது இனவாதப் பேச்சால் தூண்டப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட மற்றவர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை இரவு கின்டோர் அவென்யூவில் நடந்த இச்சம்பவத்தில், சரண்பிரீத் சிங் என்ற இந்திய இளையர் தனது வாகனத்தை நிறுத்தி உள்ளார்.
அப்போது ஒரு கும்பல் அவரை அணுகி இனவாத வார்த்தைகளைப் பேசியதோடு, அவரைத் தாக்கி மயக்கமடையச் செய்ததாகக் கூறப்படுகிறது.
“அவர்கள் என்னை நோக்கி ஆபாசமாகக் கத்தினார்கள், அதன்பிறகு சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர்,” என்று சிங் ஆஸ்திரேலியாவின் 9நியூஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலில் அவருக்கு மூளைக் காயம் மற்றும் முகத்தில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக என்பீல்டைச் சேர்ந்த 20 வயது இளையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
அவர்மீது தாக்குதல் மற்றும் காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்குக் காவல்துறையினர் செல்வதற்கு முன்பே தப்பிச்சென்ற மற்ற நபர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
“இப்படிப்பட்ட இனவாதச் சம்பவங்கள் வேதனை தருகிறது,” என்று சிங் கூறியுள்ளார்.
தெற்கு ஆஸ்திரேலியாவின் ஆளுநர் பீட்டர் மலினௌஸ்காஸ் இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“எந்தவொரு இனவாதத் தாக்குதலும் எங்கள் மாநிலத்தில் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இது எங்கள் சமூகத்தின் பெரும்பான்மையினரின் மனநிலைக்கு முரணானது,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

