புதுடெல்லி: அமெரிக்காவிலிருந்து 3 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் இந்தியா வரவுள்ளது. அவை ஜூலை 15ம் தேதி இந்தியா வரும் என்று அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் உறுதியளித்துள்ளார்.
அப்பாச்சி என்பது அமெரிக்காவில் அதிரடி தாக்குதலுக்காகத் தயாரிக்கப்பட்ட திறன் படைத்த ஹெலிகாப்டர் ஆகும். இந்திய விமானப்படை மற்றும் இந்திய ராணுவத்திலும் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்த ஹெலிகாப்டர், அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் ஆயுதங்களைக் கொண்டது.
இதன் தேவை தற்பொழுது இந்திய ராணுவத்துக்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில்தான் 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்காவுடன் ரூ.5,691 கோடி மதிப்பில் 6 அப்பாச்சி ரக விமானங்கள் வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துகொண்டது. ஆனால் இவற்றை வழங்குவதில் நீண்ட காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில்தான், 6 ஹெலிகாப்டர்களில் முதல் கட்டமாக, போயிங் நிறுவனத் தயாரிப்பான மூன்று அப்பாச்சி ரக போர்த் திறன் கொண்ட ஹெலிகாப்டர்கள் ஜூலை 15ம் தேதிக்குள் வழங்கப்பட உள்ளன.
நவம்பர் மாதத்திற்குள் மேலும் மூன்று ஹெலிகாப்டர்களும் வழங்கப்படும் என இந்திய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உடனான தொலைபேசி உரையில் அமெரிக்க தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் உறுதிபடக் கூறியுள்ளார். 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவுடன் செய்துகொண்ட ரூ.13,952 கோடி ஒப்பந்தத்தின்கீழ் இந்திய விமானப் படையில் 22 அப்பாச்சி ஹெலிகாப்டர்களும் ராணுவத்தில் 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்களும் பயன்பாட்டில் உள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி லடாக்கில் உள்ள கர்துங் லா அருகே ஒரு அப்பாச்சி ஹெலிகாப்டர் சேதம் அடைந்தது. அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் ஏவுகணைகள், துப்பாக்கிகள் மற்றும் ராக்கெட்டுகள் ஆகியவற்றைக் கொண்டு செயல்படக்கூடியவை. இந்த ஹெலிகாப்டர்கள் பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இது துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது என்பது நினைவுகூரத்தக்கது.