ஒருவழியாக மீண்டும் இயக்குநராகச் செயல்பட முடிவு செய்துவிட்டார் எஸ்.ஜே.சூர்யா.
அவர் இயக்கி, நடிக்கவிருக்கும் படத்துக்கு ‘கில்லர்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டு பூசையும் முடிந்துள்ளது.
கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு எஸ்.ஜே.சூர்யா இயக்கி, நாயகனாக நடிக்க உள்ள படம் இது.
இதில் பிரீத்தி அஸ்ரானி நாயகியாக நடிக்கிறார். இவர் ‘அயோத்தி’ படத்தில் நடித்தவர்.
சில நாள்களுக்கு முன்பே ‘கில்லர்’ படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை எஸ்.ஜே.சூர்யா வெளியிட்டிருந்தார்.
தற்போது பூசையும் நடந்ததையடுத்து, ‘கில்லர்’ படக்குழு சார்பாக சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
எஸ்.ஜே.சூர்யா தன் பங்குக்கு எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் பயணத்தைத் தொடங்க இருக்கும் எனக்கு, அபரிமிதமான அன்பைக் கொடுத்த எனது சினிமா, ஊடக நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது நன்றிகள்.
“அன்பைப் பொழிந்து ஆதரவளித்திருக்கிறீர்கள், இந்த அன்பு கிடைப்பதற்கு நான் என்ன தவம் செய்தேனோ. ‘கில்லர்’ படம் தொடர்பாக விரைவில் அடுத்தடுத்த தகவல்கள் வெளிவரும்,” என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.
இது ஓர் அழகான தொடக்கம் என்றும் எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து புதிய பயணத்தின் பூசையைத் தொடங்கி உள்ளோம் என்றும் படத்தின் நாயகி பிரீத்தி அஸ்ரானியும் தமது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.