‘டெவிலன்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள தமிழ் படம் நோபல் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
கமலகுமாரி, ராஜ்குமார் தயாரித்துள்ள இப்படத்தை, பில் பிக்கய் அருண் இயக்கியுள்ளார். இதில் ராஜ்குமார் நாயகனாகவும் கார்த்திகா, இந்திரா ஆகியோர் நாயகிகளாகவும் நடித்துள்ளனர்.
ஃபெட்ரிக், ஆனந்தி விஜயகுமார், டோர்த்தி, கிருதேவ் உள்ளிட்டோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.
இரண்டே நாள்களில் இப்படத்தின் படப்பிடிப்பு, தொழில்நுட்பப் பணிகள் என அனைத்தையும் முடித்து, முழுப்படமும் திரைகாணத் தயாராகிவிட்டது.
கடந்த 29ஆம் தேதி படப்பிடிப்பை நடத்தி உள்ளனர். 24 மணி நேரத்தில் படப்பிடிப்பு முடிந்த கையோடு, படத்தொகுப்பு, பின்னணிக் குரல் பதிவு, கணினி கிராஃபிக்ஸ் காட்சிகள் ஆகிய பணிகளும் அடுத்த 24 மணி நேரத்தில் முடிந்துவிட்டன.
விருது கண்காணிப்புக் குழுவினர் இரு நாள்களும் படக்குழுவுடன் இருந்து அனைத்துப் பணிகளையும் நேரடியாகக் கண்காணித்தனர்.
அதன் முடிவில், நோபல் சாதனைப் புத்தகத்தில் ‘டெவிலன்’ படம் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டதுடன், அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டதாக இயக்குநர் பிக்கய் அருண் தெரிவித்தார்.
“மொத்தம் மூன்று கேமராக்களை வைத்து காட்சிகளைப் படமாக்கினோம். ஓராண்டு திட்டமிட்டு இச்சாதனை படைக்கப்பட்டது.
“பலரது கூட்டுமுயற்சியில் படைக்கப்பட்ட சாதனை இது. உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி,” என்றும் அவர் கூறியுள்ளார்.
இப்படம் விரைவில் திரைகாண உள்ளது.