புகை பழக்கம் இருக்கும் நான் புகை பிடிப்பதால் வரும் ஆபத்து பற்றிய படத்தில் நடித்ததை ரசிகர்கள் விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
நடிகர் பஹத் பாசில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ‘விக்ரம்’, ‘புஷ்பா’, ‘மாமன்னன்’, மலையாளத்தில் ‘பாச்சாவும் அற்புத விளக்கும்’ என தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து வருகிறார்.
அண்மையில் வித்தியாசமான தாதா கதாபாத்திரத்தில் நடித்திருந்த ‘ஆவேசம்’ திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, ஐந்து நாள்களில் ரூ.50 கோடி வசூலித்து ஆச்சரியப்படுத்தி உள்ளது.
அதேசமயம் கடந்த ஆண்டு அவர் கன்னட இயக்குநரான பவண்குமார் என்பவர் இயக்கத்தில் ‘தூமம்’ என்ற படத்தில் நடித்தார். அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அந்தப் படம் தோல்வியை தழுவியது. இதுகுறித்த காரணத்தை தற்போது கூறியுள்ளார் பஹத் பாசில்.
“அந்த படம் புகை பிடித்தலுக்கு எதிரான ஒரு செய்தியை சொல்லும் விதமாக உருவாக்கப்பட்டிருந்தது. அப்படி ஒரு புகையிலை கம்பெனியில் வேலை பார்க்கும் ஊழியர் கதாபாத்திரத்தில் நான் நடித்திருந்தேன்.
“இன்றைய இளைஞர்கள் புகை பிடிக்கும் தவறான பாதைக்கு செல்லக்கூடாது என என் கதாபாத்திரம் மூலமாக அதில் வலியுறுத்தப்பட்டது.
“அதேசமயம் நான் புகைபிடிப்பவன் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்ட நான் புகை பிடிக்கக் கூடாது என்று கூறியதை ரசிகர்கள் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.
“சில படங்களை எடுப்பதற்கு முன் கதையாக பார்க்கும் போது மிகப் பிரமிப்பாக இருக்கும். படமாக எடுத்தே ஆக வேண்டும் எனத் தோன்றும். ஆனால் படமாக எடுக்கும்போது நாம் எதிர்பார்த்த முடிவு வராது. ‘தூமம்’ படமும் அப்படிப்பட்ட ஒரு படம்,” என்றார் பஹத் பாசில்.