நா. முத்துக்குமார் பாடல்கள் பலமுறை உதவியுள்ளன: சிவகார்த்திகேயன்

2 mins read
9a8d8b80-9442-4948-b581-1d3699fc22cc
 நடிகர் சிவகார்த்திகேயன். - படம்: இந்திய ஊடகம்

பாடலாசிரியர் நா. முத்துக்குமார் நினைவாக ‘பிகைண்ட்வுட்ஸ் டிவி’ சார்பில் நடத்தப்பட்ட நிகழ்வில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார்.

அப்போது நா. முத்துக்குமார் குறித்து தனது நினைவலைகளை, சிவகார்த்திகேயன் பகிர்ந்தார். மேலும் பல தகவல்களை அவர் தெரிவித்தார்.

“சினிமாவில் என்னுடைய முதல் பாடலை எழுதியவர் நா. முத்துக்குமார்தான். அவரது வரிகளுடனும், ஆசீர்வாதத்துடனும் என்னுடைய பயணத்தைத் தொடங்கினேன். சினிமாவில் அவருக்கும், எனக்குமான தொடர்பு அப்படித்தான் உருவானது,” என்றார் சிவா.

“என்னுடைய படங்களில் கிட்டத்தட்ட ஐந்து பாடல்களை நா. முத்துக்குமார் எழுதியுள்ளார். குறிப்பாக, ‘தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே’ பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்,” என்று சிவா குறிப்பிட்டார்.

“காலத்தால் அழியாத பாடலை எனக்காகக் கொடுத்து எனக்கு வாழ்த்து வழங்கியவர் நா. முத்துக்குமார். அவரைச் சந்தித்து இரண்டு மூன்று முறை மட்டுமே பேசி இருக்கிறேன். அதிகப்படியான பழக்கமோ, நெருக்கமோ அவருடன் எனக்கு இல்லை. ஆனால், ஒரு பாடலாசிரியராக அவருடைய வரிகளுக்கும், எனக்கும் பெரிய நெருக்கம் இருக்கிறது,” என்றார் சிவகார்த்திகேயன்.

“நான் கல்லூரியில் படித்த காலத்தில் யுவன் சங்கர் ராஜா - நா. முத்துக்குமார் ஆகியோரது கூட்டணியில் பல பாடல்கள் வெளியாகின. கல்லூரிக் காலத்தில் ஒரு பெண்ணைப் பார்த்ததும் ஏற்படும் உணர்வுகள் அனைத்தும் ‘காதல் கொண்டேன்’ திரைப்படத்தின் பாடல்களில் நிறைந்திருந்தன. அதன் பின்னர் மிகப்பெரிய தொடர்பு, ‘7ஜி ரெயின்போ காலனி’ படத்தில் இடம்பெற்ற ‘நினைத்து நினைத்துப் பார்த்தேன்’ பாடல் மூலமாக ஏற்பட்டது.

“எனக்கு 17 வயதாக இருந்தபோது, என்னுடைய தந்தை மறைந்தார். அவர் மறைந்து 23 ஆண்டுகளைக் கடந்த பின்னரும், “அந்த வலி இருக்கிறது. அந்த வகையில், ‘நினைத்து நினைத்துப் பார்த்தேன்’ பாடலில் வரும் ‘பேசிப் போன வார்த்தைகள் எல்லாம் காலந்தோறும் காதினில் கேட்கும். சாம்பல் கரையும்; வார்த்தை கரையுமா?’ என்ற வரிகள் எனக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. வலிகள் அனைத்தையும், அவர் வார்த்தைகளில் மாற்றி விட்டார்,” என்று உணர்ச்சி பொங்க சிவகார்த்திகேயன் பேசினார்.

நா. முத்துக்குமாரின் ‘வேடிக்கை பார்ப்பவன்’, ‘பட்டாம்பூச்சி விற்பவன்’ போன்ற புத்தகங்களைப் படித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“முதன்முதலில் என்னை இயக்குநர் நெல்சன் பாடல் எழுதக் கூறியபோது, ஒரு வேடிக்கையான பாடலை எழுதினேன். அதற்காக நான் வாங்கிய சம்பளத்தை நா. முத்துக்குமாரின் குடும்பத்தினரிடம் கொடுத்தேன். இதனை உதவியாக நான் கருதவில்லை; எனக்கான கடமை இது. நா. முத்துக்குமாரை போலவே அவரது மகனும் நிறையப் பாடல்கள் எழுத வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்,” என்றார் சிவா.

“நா. முத்துக்குமார் இல்லாத காரணத்தால் பல கொடுமைகள் நடக்கிறது. குறிப்பாக, நான் பாடல்கள் எழுதத் தொடங்கி இருக்கிறேன். ஆனால், ஒவ்வொரு முறை பாடல் எழுதத் தொடங்கும் போதும், நா. முத்துக்குமாரின் பாடல்களைக்  கேட்ட பின்னர்தான் எழுதுவேன். அந்த வகையில், ‘காதல் கொண்டேன்’ படத்தில் இடம்பெற்ற ‘தேவதையைக் கண்டேன்’ பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்