நடிகை மோகினி 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க உள்ளார்.
கடந்த 1991ஆம் ஆண்டு ‘ஈரமான ரோஜாவே’ படம் மூலம் நாயகியாக அறிமுகமான மோகினி, பின்னர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.
இவர் மலையாளத்தில் அதிகம் நடித்திருப்பதுடன், கேரளாதான் தனக்குச் சொந்த ஊர் என்பதுபோல் உணர முடிகிறது என்று பேட்டிகளில் குறிப்பிட்டதுண்டு.
திருமணமான பின்னர் திரையுலகை விட்டு விலகியிருந்தவர், பின்னர் கணவர் கொடுத்த ஊக்கத்தால் மலையாளத்தில் வெளியான ‘கலெக்டர்’ என்ற படத்தில் நடித்திருந்தார். பிறகு அவரைத் திரையில் பார்க்க முடியவில்லை.
இந்நிலையில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மலையாளப் படத்தில் நடிக்கப் போகிறார் மோகினி.
இயக்குநர் ஜினு ஆபிரகாம் இயக்கத்தில் பிரித்விராஜ் நாயகனாக நடிக்கும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்குகிறது.

