காலஞ்சென்ற நடிகை மனோரமா, பல ஆண்டுகளுக்கு முன்பு பாடிய பாடல் ஒன்று, முதல் முதலாகத் திரையில் ஒலிக்கப் போகிறது.
மனோரமா மறைந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இறப்பதற்கு முன்பு தங்கமணி இயக்கத்தில் புதுமுகங்கள் நடித்த ‘பேராண்டி’ என்ற படத்தில் ஒரு பாடலைப் பாடியிருந்தார். சில காரணங்களால் அந்தப் படம் அப்போது வெளியாகவில்லை.
தன்னால் நடிக்க முடியாது என்று கூறிய மனோரமா, தனக்குப் பதில் பழம்பெரும் நடிகை லதாவைப் பரிந்துரைத்தார்.
“அப்போது மனோரமாவின் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. எனினும், எங்களுக்காக ‘பச்சை மலை காட்டுக்குள்ளே பவளமலை ஓரத்திலே’ என்ற பாடலைப் பாடிக்கொடுத்தார்.
“அந்தப் பாடலுக்கு ஹித்தேஷ் முருகவேல் இசையமைத்ததும் பாடல் பதிவின்போது மிகுந்த அர்ப்பணிப்புடன் மனோரமா ஆச்சி பாடியதும் மறக்க முடியாத நிகழ்வு. படம் விரைவில் திரைகாணும்,” என்கிறார் இயக்குநர் தங்கமணி.
கோபிச்செட்டிபாளையத்தைக் கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில், பேரனின் காதலுக்கு பாட்டி லதா எப்படி உதவுகிறார் என்பதுதான் கதையாம்.
“மனோரமா பாடிய பாடலை நான்தான் எழுதியுள்ளேன். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மனோரமா பாடிய பாடலைக் கேட்கும் ரசிகர்களுக்கு அது புதுவிதமான அனுபவத்தைக் கொடுக்கும்,” என்கிறார் தங்கமணி.