‘ஜனநாயகன்’ படத்தில் அரசியல் பாடலைப் பாடிய மலையாள ‘ராப்’ பாடகர்

2 mins read
543eb3da-864c-4bcd-8681-87a64ce930ff
‘ராப்’ பாடகர் ஹனுமன்கைண்ட். - படம்: ஊடகம்

விஜய்யின் கடைசிப் படம் என்பதை மட்டுமே குறிப்பிட்டு, ‘ஜனநாயகன்’ படத்துக்கு விளம்பரம் தேடி வருகிறார்கள்.

படத்தில் அனல் பறக்கும் வசனங்கள் இடம்பெறும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

பிரபல மலையாள ‘ராப்’ பாடகர் ஹனுமன்கைண்ட் (Hanumankind) இப்படத்தில் ஒரு பாடலைப் பாடியுள்ளார். இது எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பாக அமைந்துள்ளதாம்.

திரையில் இப்பாடலைப் பார்க்கும்போது ரசிகர்கள் துள்ளாட்டம் போடுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை என்று ‘ஜனநாயகன்’ படக்குழுவினர் உற்சாகத்துடன் கூறுகின்றனர்.

அண்மையில் வெளியான ரஜினியின் ‘கூலி’ படம் திரையரங்க முன்பதிவில் சாதனை படைத்தது. அதை ‘ஜனநாயகன்’ படம் முறியடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என விஜய்யின் தொண்டர் படைக்கு தவெக நிர்வாகிகள் மறைமுக உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தகவல்.

படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

இந்நிலையில், இனி தமிழ்ப் படங்களில் பாடுவதற்காக அடிக்கடி சென்னைக்கு வர வேண்டியிருக்கும் என்று கூறியுள்ள ஹனுமன்கைண்ட், கேரள இளையர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.

விஜய்க்கும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால் அவர் படத்தில் பாடியதைப் பெருமையாகக் கருதுவதாகக் கூறுகிறார் ஹனுமன்.

இவர் வெளியிட்ட ‘பிக் டாக்’ ராப் பாடலானது, கேரளாவின் களரி தற்காப்புக் கலையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. உண்மையான நடனக் கலைஞர்களை வைத்து அவர் உருவாக்கிய இப்பாடல் காணொளிக்கு உலக அளவில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தில் ஹனுமன்கைண்ட் பாடிய பாடல், அரசியல் வரிகள் கொண்ட அதிரடிப் பாடலாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக விஜய் ரசிகர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்