தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருவரவேற்பைப் பெற்ற படம் ‘பைசன்’. இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நாயகனாகவும் அனுபமா பரமேஸ்வரன் நாயகியாகவும் அப்படத்தில் நடித்திருந்தனர்.
கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான படம் அது.
இந்நிலையில், அப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து நடிகை அனுபமா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை முன்பு வெளியிட்டார்.
அதில், “என் இதயம் இன்னும் தனக்குக் கிடைத்த அன்பை எப்படித் தக்க வைத்துக்கொள்வது என்பதைக் கற்றுக்கொண்டே இருக்கிறது. சில படங்கள் வெறும் பொழுதுபோக்காக மட்டும் இருப்பதில்லை. அவை நமக்குள்ளே உணர்வாகக் கலந்து, ஓர் அமைதியான மாற்றமாக மாறிவிடுகின்றன,” எனக் கூறினார்.
மேலும், ‘பைசன்’ எனக்கு அப்படித்தான். என் வாழ்நாள் முழுதும் நான் போற்றும் வகையில் என்னைப் பாதித்த படம். இவ்வுலகத்தில் வாழ்வதற்கு நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாகவும் அதிர்ஷ்டசாலியாகவும் உணர்கிறேன்,” என அவர் பதிவிட்டிருந்தார்.
தற்போது, அப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காணொளி ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
‘பைசன்’ என் திரையுலகப் பயணத்திற்கு அப்பாற்பட்டது என்று நான் சொன்னதற்கான காரணம் இதுதான் என அக்காணொளியுடன் வெளியான பதிவில் கூறியுள்ளார்.
அத்துடன், “மண், மக்கள், ஓர் இடத்தின் ஆன்மா வழியிலான அந்தப் பயணம் எனக்குள் ஏதோ ஒன்றை மாற்றியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு பயிற்சிப் பட்டறைபோல உணர்ந்தேன். கற்பது, கற்பதைத் திருத்துவது, கற்றுக்கொள்வதை தவிர்ப்பது என உண்மையைச் சுவாசிக்கும் கதைகளுக்கு மத்தியில் வாழ்ந்த நாள்கள் அவை,” என தனது ‘பைசன்’ அனுபவத்தைச் சுவாரசியமாகப் பகிர்ந்துள்ளார் அனுபமா.

