ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் இவ்வாண்டு காந்தி ஜெயந்தி தினத்தன்று (அக்டோபர் 2) வெளியாகியது.
2022ஆம் ஆண்டு வெளியான ‘காந்தாரா’ படத்தின் முற்காலக் கதையாக 4ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதையாக இந்தப் படம் அமைந்துள்ளது. அக்டோபர் 2ஆம் தேதி வெளியானதிலிருந்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ‘காந்தாரா சாப்டர் 1’ நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
அமோக வரவேற்பைத் தொடர்ந்து இப்படத்தின் ஆங்கில வடிவம் வரும் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) உலகெங்கும் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் உலகளவில் ரூ.852 கோடி வசூலித்து இப்படம் புதிய சாதனை படைத்துள்ளது. படம் வரும் வெள்ளிக்கிழமை பிரைம் வீடியோ ஓடிடி தளத்திலும் வெளியாகவிருக்கிறது.
கர்நாடகத்தில் வாழும் துலுவா சமூகத்தினரின் இறை நம்பிக்கையைச் சித்திரிக்கின்றன ‘காந்தாரா’, ‘காந்தாரா வாப்டர் 1’. இவ்விரு படங்களும் கன்னடத் திரையுலகை அடுத்த அத்தியாயத்துக்குக் கொண்டு சென்றவற்றில் அடங்கும்.
‘கேஜிஎஃப்’, ‘காந்தாரா’ தொடர் திரைப்படங்கள் உலகின் கவனத்தைக் கன்னடத் திரையுலகம் பக்கம் ஈர்த்தன என்று சொன்னால் அது மிகையில்லை. இப்படங்கள் அனைத்தையும் ஹொம்பாலே ஃபில்ம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

