‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் ஷாலின் ஸோயா.
இவர் முதன்முறையாக தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார். கிராமத்துப் பின்னணியில் 90களின் காலகட்டத்தில் நடக்கும் கதைக்களத்தில் உருவாகும் புதிய படத்தில் அருண், பிரிகிடா, ஜாவா சுந்தரேசன், தேவதர்ஷினி, அருள்தாஸ், அஷ்வின் காக்குமனு ஆகியோர் நடிக்கின்றனர்.
ஆர்.கே.இன்டர்நேஷனல் கே.எஸ்.ராமகிருஷ்ணா தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
இது குறித்து ஷாலின் ஸோயா, “90களின் இறுதியிலும் 2000களின் தொடக்கத்திலும் ஒரு கிராமத்தில் நடக்கும் சம்பவம்தான் இப்படத்தின் கதை.
“அது அங்குள்ளோரின் வாழ்க்கையை எப்படி மாற்றி அமைக்கிறது என்பதை நகைச்சுவையுடன் கற்பனை அம்சங்களைக் கலந்து சொல்ல இருக்கிறோம். இப்படத்தை இயக்க வாய்ப்பளித்த ராமகிருஷ்ணா சாருக்கு நன்றி. தரமான படைப்புகளை ரசிக்கும் தமிழ் ரசிகப் பெருமக்கள் எங்கள் படத்தையும் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறோம்,” என்று கூறியுள்ளார்.
ஷாலின் ஸோயா ஏற்கெனவே மலையாளத்தில் இயக்கிய ‘தி பேமிலி ஆக்ட்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இவர், முன்னதாக ஏஷியானெட் மலையாளத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஆட்டோகிராஃப்’ நாடகத் தொடரில் வில்லியாக நடித்துப் புகழ்பெற்றவர்.

