காலஞ்சென்ற மகள் பவதாரிணியின் நினைவில் ‘பவதா பெண்கள் இசைக்குழு’ (Bavatha All-Girls Orchestra) ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா, தமது சமூக ஊடகப் பக்கங்களில் அறிவித்துள்ளார்.
இந்த இசைக்குழுவில் சேர ஆர்வமுள்ள திறமையுள்ள பெண் பாடகர்கள், இசைக் கலைஞர்கள் தொடர்புகொள்ளும்படி இளையராஜா அழைப்பு விடுத்தார்.
ராசய்யா படத்தில் இடம் பெற்றிருக்கும் “மஸ்தானா... மஸ்தானா...” பாடலில் இடம்பெற்ற தமது மென்மையான, துடிப்பான குரலின்வழி தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் பவதாரிணி.
பாரதி திரைப்படத்தில் “மயில் போல பொண்ணு ஒன்னு...” என்ற பாடலைப் பாடி அவர் தேசிய விருது பெற்றார்.
பல படங்களின் பாடல்களைப் பாடியுள்ள அவர், அமிர்தம், இலக்கணம், வெள்ளச்சி போன்ற சில படங்களில் இசையமைப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் புற்றுநோய் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி 47 வயதில் உயிரிழந்தார்.
இந்தக் குழுவில் சேர விருப்பமுள்ளவர்கள் allgirlsorchestra@gmail.com என்கிற மின்னஞ்சலுக்குத் தங்களின் விவரங்களை அனுப்பலாம் எனவும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

