fontsize: 60% 70% 80% 90%

செய்திக்கொத்து

ஹிந்தி மொழியில் ஆர்வம் கூடுகிறது: டாக்டர் இங் எங் ஹென்

சிங்கப்பூரில் ஹிந்தி மொழி பேசாதவர்களிடையில் ஹிந்தி மொழியார்வம் அதிகரித்து வருவதாகக் கல்வி அமைச்சரும் இரண்டாவது தற்காப்பு அமைச்சருமான டாக்டர் இங் எங் ஹென் கூறினார்.

ஹிந்தி நிலையங்கள் தினக் கொண்டாட்டத்தில் அவர் இக்கருத்தை வெளியிட்டார்.

ஹிந்தி பாப் கலாசாரத்தால் சிலர் கவரப்படுகின்றனர். அதே வேளையில், இந்தியாவின் தலையெடுப்பால், ஹிந்தி மொழியின் பொருளியல் சாதகத்தைப் பலரும் உணர்வதாக அவர் குறிப்பிட்டார்.

ஹிந்தி சங்கம் வழங்கும் ஹிந்தி பாடத்திட்டத்தில் மேலும் நான்கு பள்ளிகள் சேர்ந்திருப்பதாக டாக்டர் இங் தெரிவித்தார். இவற்றையும் சேர்த்து மொத்தம் 53 பள்ளிகளில் ஹிந்தி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

மாணவர்கள் ஹிந்தி மொழியைப் பயன்படுத்த ஊக்குவிப்பாக, வாசிப்புத் திட்டங்கள், இலக்கிய விழாக்கள், புதுமையான மொழி நடவடிக்கைகள் போன்றவற்றையும் ஹிந்தி சங்கம் தொடங்கியிருக்கிறது.

சிங்கப்பூர் மாணவர்கள் ஹிந்தி மொழி கற்க ஹிந்தி சங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளை டாக்டர் இங் பாராட்டினார்.
தாய்மொழிக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தமிழ் அல்லாத ஐந்து இந்திய மொழிகளின் போதனைக்கும் கற்றலுக்கும்

கல்வி அமைச்சு கூடுதல் ஆதரவளித்து வருவதாகவும் டாக்டர் இங் கூறினார்.

பெங்காலி, குஜராத்தி, பஞ்சாபி, உருது, ஹிந்தி ஆகியவை அவ்வைந்து மொழிகள். இந்த மொழிகளில் வகுப்பு நடத்தும் அமைப்புகளுக்கு அமைச்சு ஆண்டுதோறும் கிட்டத்தட்ட $1.5 மில்லியன் நிதி உதவி வழங்குகிறது.

நாட்டியத்தால் சிறப்புற்ற கட்டடக் கலை

இந்தியக் கட்டடக் கலையின் சிறப்பையும் பரத நாட்டியத்தின் அழகையும் ஒன்றிணைத்துப் படைக்கிறது ‘நிர்மாணிக்கா’.
அழகையும் நளினத்தையும் அடிப்படையாகக் கொண்ட இரு கலைகளுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு.

பரதநாட்டிய அபிநயங்கள், அசைவுகள் வழி இந்திய கட்டட அமைப்பு, அழகு, வரலாறு, தத்துவம், அவற்றின் அதிசயங்கள் போன்றவற்றைச் சித்திரிக்கிறது நிர்மாணிக்கா.

இந்தியாவிலுள்ள தாஜ் மஹால், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், கொணாரக், இந்தோனீசியாவின் போரோபுதூர் போன்ற உலகப் பிரபலமான இந்தியரின் கட்ட அமைப்புகளின் நுணுக்கங்களை நாட்டியம் விவரிக்கிறது.
தொழில் நுட்பம் வளர்ச்சியுற்றிராக அக்காலத்தில் கட்டடக் கலைஞர்களின் படைப்பாற்றலையும் கற்பனா சக்தியையும் ஆராய்கிறது
இந்த நாட்டியப் படைப்பு.

சிங்கப்பூரின் மூத்த நடனக் கலைஞர் திருமதி நீலா சத்தியலிங்கம் நாட்டியத்தை இயக்கியுள்ளார்.

அப்சரஸ் ஆர்ட்ஸ் படைக்கும் நாட்டியத்தின் மையக் கருவை பிரபல இசைக் கலைஞர் அரவிந்த் குமாரசாமி உருவமைத்துள்ளார்.
அப்சரஸ் நடனமணிகளுடன் புகழ்பெற்ற நடனக் கலைஞர் அஞ்சனா ஆனந்தும் நடனமாடுகிறார்.

அனிஷ் ராம், அரவிந்த் குமாரசாமி, டி.ரமணன், {வித்யா, கோவிந்தராஜுலு நாயுடு, கவிதா ஜெயராமன், என்.பல்லவராஜன், எம்.கஜன், தீபன் கணேஷ் ஆகியோர் நேரடி இசை வழங்குகின்றனர்.
எஸ்பிளனேட் அரங்கில் ஜூலை 30, 31 இரு தேதிகளிலும் இரவு 8.00 மணிக்கு நிகழ்ச்சி நடைபெறும்.
கட்டணம்: $25, மூத்த குடிமக்கள், மாணவர்களுக்குச் சிறப்புக் கட்டணம்” $16.

வருங்காலத்திற்கு ஏற்ற கல்வி

ஒவ்வொரு மாணவருக்கும் ‘டேப்லட்’ கணினி. பாடங்களைக் கணினியிலேயே பதிவேற்றி ஆசிரியர்களிடம் மாணவர்கள் சமர்ப்பிக்கின்றனர்.

எதிர்காலப் பள்ளித் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள முதல் பள்ளியான பீக்கன் தொடக்கநிலைப் பள்ளி, தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டு மேம்படுத்தப்பட்ட கற்றல் முறைகளைக் கையாளுகிறது.

சிங்கப்பூரின் எதிர்காலப்பள்ளிகள் திட்டத்தில் உருவான முதல் தொடக்கநிலைப் பள்ளி இது.

“21ம் நூற்றாண்டின் சவால்களைச் சந்திக்கும் தன்னம்பிக்கையும் கற்றலுக்கான ஆசையும் பீக்கன் தொடக்கப் பள்ளியின் இறுதியில் மாணவர்களிடத்தில் காணலாம்,’’ என்றார் பீக்கன் தொடக்கப் பள்ளியின் துணைத் தலைமை ஆசிரியர் திரு சூராஜ் நாயர்.

மாணவர்களின் உருவாக்கும் திறனை வெளிப்படுத்த ‘பீக்கன்வோர்ல்’ என்ற ‘3டி’ கற்றல் சூழலைத் தொடக்கநிலை மாணவர்களுக்காக வடிவமைத்துள்ளது இப்பள்ளி.

எந்த நேரத்திலும் எங்கும் இக்கற்றல் சூழலின் பயன்பாடுகளை மாணவர்கள் இணையத்தின் வழி பயன்படுத்தலாம்.
2008 ஜனவரியிலிருந்து இயங்கி வரும் இப்பள்ளியில் தொடக்கநிலை ஒன்றிலிருந்து மூன்று வரை 720 மாணவர்கள் உள்ளனர்.

தாய் மொழிக் கல்விக்கும் வகுப்பறைகளில் உள்ள கணினி பயன்படுகிறது. ஒன்றாம் வகுப்பிலிருந்தே மாணவர்கள் கணினி மயம் மாணவர்களின் அன்றாடப் பாடத் திட்டத்தில் கலக்கப்படுகிறது என்றார் அப்பள்ளியின் தமிழாசிரியர் திருமதி சிவ கௌரி கலியமூர்த்தி(39).

புக்கிட் பாஞ்சாங்கில் உள்ள இப்பள்ளியின் அதிகார திறப்பு விழாவில் நேற்று இடைக்கால தகவல் தொடர்பு கலைகள் அமைச்சர் ரியர் அட்மிரல் லுயி டக் இயூ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அப்பள்ளியின் ‘3டி உலகத்தைத்’ திறந்து வைத்தார்.

கையில் முத்தமிட்ட டாக்சி ஓட்டுநருக்குச் சிறை

டாக்சி ஓட்டுநர் பிரான்சிஸ் கியன் டாய் ஹோ, தனது டிரான்ஸ்-கேப் டாக்சியில் ஏறிய 24 வயது பெண் சிமெய் ஸ்திரீட் 1ல் இறங்கும்போது சட்டென அவரது வலது கையைப் பிடித்து முத்தமிட்டார்.

சென்ற ஆகஸ்ட் மாதம் நடந்த இச்சம்பவம் பற்றி அப்பெண் தனது காதலனிடம் சொன்னார். போலிஸ் அதிகாரியான காதலர், போலிசில் புகார் செய்யுமாறு பெண்ணிடம் கூறினார்.

நான்கு நாட்களுக்குப் பிறகு 52 வயது கியன் கைது செய்யப்பட்டார்.

பெண்ணை மானபங்கப்படுத்திய குற்றத்திற்காக கியனுக்கு இரண்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

சென்ற 2002ம் ஆண்டு 19 வயதுப் பெண் பயணியையும் கியன் இதே போல மானபங்கப்படுத்தியதாக மாவட்ட நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அந்தப் பெண்ணின் கையில் முத்தமிட்டதோடு, கட்டித்தழுவி கன்னத்திலும் முத்தமிட்டார். அந்தக் குற்றத்திற்காக அவருக்கு $8,000 அபராதம் விதிக்கப்பட்டது.

களவுப்பொருட்களை ஏற்றிச்சென்ற டாக்சி ஓட்டுநர்

களவாடப்பட்ட செப்புக்கம்பிகளை ஏற்றிச்செல்ல உதவிய 58 வயது டாக்சி ஓட்டுநர் இங் பீ ஹூவுக்கு ஒன்றரை மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம், இங்கின் டாக்சியில் ஏறிய ஒரு மியன்மார் நாட்டவர், நடு இரவில் செப்புக்கம்பிகளை ஏற்றிச்செல்லும்படி இங்கிடம் கேட்டார். இங் $100 பணத்திற்கு ஒப்புக்கொண்டார்.

இவ்வாண்டு மார்ச் 6ம் தேதி அதிகாலை 3 மணியளவில், மியன்மார் நாட்டவரை ஏற்றிக்கொண்டு, வட்ட ரயில் பாதை கட்டுமானத் தளத்திற்குச் சென்றார் இங். அங்கு மியன்மார் நாட்டவரும் மேலும் இருவரும் டாக்சியில் செப்புக்கம்பிகளை ஏற்றினர்.

அங்கிருந்து காலாங் பாருவிலுள்ள வர்த்தக நிறுவனத்திற்குச் செல்லும் வழியில், போலிஸ் சாலைத் தடுப்பைக் கண்டதும், டாக்சி ஓட்டுநர் சற்று தொலைவில் டாக்சியை நிறுத்தினார்.

மியன்மார் நாட்டவர் டாக்சியிலிருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டார். டாக்சியில் $7,000க்குமேல் மதிப்புள்ள செப்புக் கம்பிகளைப் போலிசார் கண்டனர்.

அவை களவாடப் பட்டவை என்பது தனக்குத் தெரியும் என இங் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

முனைவர் அய்க்கண்ணுடன் கலந்துரையாடல்

தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான முனைவர் அய்க்கண்ணுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஜூலை 26ம் தேதி திங்கட்கிழமை விக்டோரியா சாலையில் உள்ள உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் மாலை 6.30 மணிக்கு நடைபெறும்.

முனைவர் அய்க்கண் திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர்.
தமிழ் எழுத்தாளர் கழக ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.

குண்டர் சண்டையில் ஆடவர் மரணம்

குண்டர் கும்பல் சண்டையைத் தொடர்ந்து
28 வயது மலாய் ஆடவர் மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் ஆர்ச்சர்ட் பிளாசாவில் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை நேரத்தில் நடந்துள்ளது.
சண்டை பற்றி அதிகாலை 4.15க்கு தகவல் வந்ததாக போலிஸ் தெரிவித்தது.
தாக்கப்பட்டவருக்கு வெட்டுக்காயங்கள் இருந்ததாகவும் அவர் அதிகாலை 5.00 மணி அளவில் மருத்துவமனையில் இறந்ததாகவும் போலிஸ் அறிக்கை குறிப்பிட்டது.
பாதுகாவலர் ஒருவர், பிளாசாவின் முன்தளத்தில் ஐந்து பேர் ஒருவரைத் தாக்கிவிட்டு ஓடியதைப் பார்த்ததாக ரேசர்டிவியிடம் தெரிவித்தார்.
அந்த பாதுகாவலர் உடனடியாக போலிசுக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
ஒரு பாராங் கத்தியும் இரு வெட்டுக் கத்திகளும் சம்பவம் நடந்த இடத்தில் காணப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் ரத்தக் கறைகள் எதுவும் காணப்படவில்லை என அறியப்படுகிறது. இச்சம்பவத்தை கொலை என போலிஸ் வகைப்படுத்தியுள்ளது.

விரைவுச் சாலையில் பேருந்து விபத்து: 19 பேர் காயம்

கிளிமென்டி அவென்யூ 6க்கு அருகே, சாங்கி விமான நிலையம் நோக்கிச் செல்லும் தீவு விரைவுச் சாலையில் பேருந்தும் கனரக வாகனம் ஒன்றும் மோதிக்கொண்டதில் 19 பேர் காயமுற்றனர்.

மதியம் 3.15 மணியளவில் தகவல் அறிந்து குடிமைத் தற்காப்புப் படையினர் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்தனர்.
காயமுற்றவர்கள் அனைவரும் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களில் இருவர் மோசமான நிலையில் உள்ளதாக குடிமைத் தற்காப்புப் படையினர் தெரிவித்தனர்.

உலக இணைய மாநாடு: பகிர்தல் கூட்டம்

கடந்த மாதம் தமிழ்நாட்டின் கோவை நகரில் நடைபெற்ற உலக இணைய மாநாடு பற்றிய பகிர்தல் கூட்டம் நாளை ஜூலை 24ம் தேதி சனிக்கிழமை பீட்டி ரோட்டில் உள்ள சிண்டா அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கூட்டத்தில் தேசிய கல்விக் கழகத்தைச் சேர்ந்தவர்களும் தமிழ் ஆசிரியர்களும் தங்களது கட்டுரைகளைப் படைப்பார்கள்.
சிங்கப்பூரில் தமிழ்மொழி கற்றல்-கற்பித்தலில் கணினியின் பயன்பாடு, இணையம் வளர்க்கும் தமிழ், தமிழ் கற்றல் கற்பித்தலில் கூகல் போன்ற தலைப்புகளில் கட்டுரைகள் இடம்பெறுகின்றன.

மாநாட்டில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள், முடிவுகள் போன்றவை குறித்து கூட்டத்தில் அறிவிக்கப்படும்.
மாலை 5.00 மணி முதல் 7.30 மணி வரை நடைபெறும் கூட்டத்தில் அனைவரும் பங்கேற்கலாம். அனுமதி இலவசம். மேல் விவரங்களுக்கு அழைக்க திரு மணியம் - 97312715

வெளிநாட்டுப் பிச்சைக்காரர் அதிகரிப்பு

சிங்கப்பூர் தெருக்களில் இப்போது அதிகமான வெளிநாட்டுப் பிச்சைக்காரர்கள் தென்படுகின்றனர்.

இவ்வாண்டின் முதல் ஐந்து மாதங்களில் பிடிபட்ட 60 பிச்சைக்காரர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் வெளிநாட்டவர்கள் என்று சமூக வளர்ச்சி, இளையர், விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

நியமன நாடாளுமன்ற உறுப்பினர் லாரன்ஸ் வீ எழுப்பிய கேள்விக்கு டாக்டர் பாலகிருஷ்ணன் நாடாளுமன்றத்தில் பதிலளித்தார்.

சிங்கப்பூரில் பிடிபடும் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு வேறுபடுவதாக டாக்டர் பாலகிருஷ்ணன் கூறினார்.
சென்ற 2006ம் ஆண்டுக்கும் 2009ம் ஆண்டுக்கும் இடையில், ஆண்டுக்குச் சராசரியாகச் சுமார் 85 பிச்சைக் காரர்கள் பிடிபட்டனர்.

ஆதரவற்றோர் சட்டத்தின்கீழ் சிங்கப்பூரில் பிச்சையெடுப்பது சட்டப்படி குற்றமாகும்.
பணப் பிரச்சினையுள்ள சிங்கப்பூரர்கள் பிச்சையெடுக்கத் தேவையில்லை என்றார் அமைச்சர்.

சமூக மேம்பாட்டு மன்றங்கள், குடும்பச் சேவை நிலையங்கள், அடித்தள அமைப்புகள் ஆகியவற்றிடம் உதவி நாடலாம்.

ஏழைகளுக்கு உதவிட பற்பல தொண்டூழிய அறப்பணி அமைப்புகளும் சமய, குடிமை அமைப்புகளும் இருக்கின்றன.

எங்கே உதவி நாடுவது என்று தெரியாதவர்கள், 1800-2220000 என்ற எண்ணில் காம்கேர் தொலைபேசி சேவையை அழைக்கலாம்.

பிச்சைக்காரர்கள் கண்ணில்பட்டால், பொதுமக்கள் உடனடியாக அமைச்சிடம் தெரியப்படுத்தவேண்டும்.
அதோடு, பதிவு செய்யப் பட்ட அறப்பணி அமைப்புகளுக்கும் குடும்பச் சேவை நிலையங்களுக்கும் நன்கொடை வழங்கியும் பொதுமக்கள் உதவி செய்யலாம்.

Syndicate content
Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838