fontsize: 60% 70% 80% 90%

சிங்கப்பூர்

கொள்கைகள் ஹோடா சட்டத்திற்கு முரணானவை அல்ல: பார்க்வே ஹெல்த்

மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையை நிர்வகிக்கும் பார்க்வே ஹெல்த், தனது கொள்கைகளும் நடைமுறைகளும் ‘ஹோடா’ சட்டத்திற்கு முரணானவை அல்ல என்று தெரிவித்திருக்கிறது.
தனது கொள்கைளை அது மறுபரிசீலனை செய்தது.
அதனைத் தொடர்ந்து, ‘ஹோடா’(HOTA) எனப்படும் மனித உறுப்பு மாற்று சட்டத்திற்கு உட்பட்டே அவை உள்ளதாக பார்க்வே நேற்று கூறியது.
உறுப்பு தானத்தை வியாபாரமாக்கியதன் தொடர்பில் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இன்னும் விசாரணைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இறந்தவர்களிடமிருந்து சிறுநீரகத்தை தானமாகப் பெறுவதற்கு சிங்கப்பூரில் சுமார் 8 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது.

‘உயிருள்ளோர் தரும் உறுப்பு தான திட்டம்’ குறித்து மறுபரிசீலனை

உயிருள்ளோர் உறுப்பு தானம் தரும் திட்டத்தில் குறைபாடுகள் எதுவும் உள்ளனவா என்று மறுபரிசீலனை செய்யப்படும் என்று சுகாதார அமைச்சு சனிக்கிழமையன்று கூறியது.
கடந்த வாரம் முதன்முறையாக சட்டவிரோத மனித உறுப்பு தானத்தை வியாபாரமாக்கியதாக இந்தோனீசியர்கள் இருவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.
மருத்துவ மையமாக விளங்கும் சிங்கப்பூரின் பெருமையை இச்சம்பவம் குலைத்துவிடாது என்று நம்புவதாக சுகாதார அமைச்சர் கோ பூன் வான் குறிப்பிட்டிருந்தார்.

அதிபர் நிதிக்கு $100,000

சிரிப்புக்கும் சிந்தனைக்கும் வேலை கொடுத்த சிகரங்கள் 2008 நிகழ்ச்சியில், வசதி குறைந்தவர்களும் நினைவில் வைக்கப்பட்டனர்.
சனிக்கிழமை மாலை சிங்கப்பூர் உள்ளரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபர் எஸ்.ஆர்.நாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
மினி என்வைரன் மெண்ட், ஜிஎம்டி நகைக்கடை ஆகிய நிறுவனங்களின் ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக, அவற்றின் உரிமையாளர்கள் திரு அப்துல் ஜலீல் PBM, திரு தமீம் ஆகியோர் அதிபர் சவால் நிதி 2008-க்கு $100,000-ஐ அதிபர் நாதனிடம் வழங்கினர்.

அங் மோ கியோவில் முதியோருக்கான $2.8 மில்லியன் நிலையம்

அங் மோ கியோ, இயோ சூ காங் வட்டாரத்தில் வசிக்கும் முதியோருக்காக முதல் முறையாக அடுத்த ஆண்டு புதிய நிலையம் ஒன்று அமைக்கப்படும்.
11 கூடைப்பந்துத் தடப் பரப்பளவில் அமையவிருக்கும் இந்த நிலையம், $2.8 மில்லியன் செலவில் கட்டப்படும். நிலையத்தின் கட்டுமானத் தொழில்கள் அடுத்த ஆண்டு கடைசியில் முடிவு பெறும்.
முதுமையிலும் சுறுசுறுப்பை வளர்க்க, நிலையத்தில் நடனப் பயிற்சிகள் முதல், மாஜோங் விளையாட்டுகள் வரை நடைபெறும்.
அங் மோ கியோவின் துடிப்பான முதியோர் நிலையம் பற்றிய விவரங்களை வெளியுறவு அமைச்சுக்கான மூத்த துணை அமைச்சர் டாக்டர் பாலாஜி சதாசிவன் சனிக்கிழமை நடைபெற்ற செங் சான் சமூக நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.

அமைச்சும் கட்டல் பட்டறைகளும் பங்கேற்ற பாதுகாப்பு உரை

கப்பல் பட்டறை நிறுவனங்களுடன் வேலையிடத்தில் பாதுகாப்பைப் பற்றிய பேச்சுகளை மனிதவள அமைச்சு நடத்தி வருகிறது. கடந்த மூன்று வாரங்களில் கப்பல் பட்டறைகளில் நடைபெற்ற விபத்துகளில் ஐவர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் காயமடைந்தனர்.
“அமலாக்கத்தைத் தீவிரப்படுத்த நாங்கள் செயல்பட்டு வருகிறோம். கப்பல் பட்டறை துறையுடன் சேர்ந்து பாதுகாப்புத் தகவல்கள் மேல் நிர்வாகம் முதல் ஊழியர்கள் வரை என்று அனைவரையும் சென்றடைவதை உறுதிப் படுத்தவிருக்கிறோம்,” என்று இடைக்கால மனிதவள அமைச்சர் கான் கிம் யோங் சனிக்கிழமையன்று தெரிவித்தார்.

22வது முறையாக மின்னற்படை சிறந்த போர்ப் படைப் பிரிவு

முதலாவது மின்னற்படை பட்டாளம் சாதனை அளவாக 22வது முறையாகச் சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் சிறந்த போர்ப் படைப் பிரிவாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து 5வது ஆண்டாகவும் இந்தப் படைப் பிரிவு இந்த விருதைப் பெறுகிறது.
சிங்கப்பூர் ராணுவப் படைப் பிரிவுகளில் தலைசிறந்ததாகத் திகழ்கிறது மின்னற்படைப் பிரிவு. ஆகாயம், கடல், ஹெலிகாப்டர், தாக்குதல், கண்காணிப்பு, பதுங்கிக் தாக்குதல் எனப் பல்வேறு போர்க்கூறுகளைச் சிறப்பாகக் கையாள்வதில் மின்னற்படை தன்னிகரற்று விளங்குகிறது.

ஜூலை 1ம் தேதி முதல் எல்லா விரைவுச் சாலைகளிலும் போக்குவரத்து அதிகாரிகள்

சிங்கப்பூரின் அனைத்து விரைவுச் சாலைகளிலும் ஜூலை 1ம் தேதி முதல் தனது போக்குவரத்து அதிகாரிகள் பணியில் இருப்பார்கள் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று தெரிவித்தது.
விரைவுச் சாலைகளில் போக்குவரத்தைச் சரளப்படுத்துவதிலும், சாலை விபத்துகள் நிகழ்ந்தால் உடனடியாக உதவி அளிப்பதற்கும் அதிகாரிகள் முக்கிய பங்காற்றுவார்கள்.
இந்தப் போக்குவரத்து அதிகாரிகள் முதலில் காலாங்-பயலேபார் விரைவுச்சாலை, மத்திய விரைவுச்சாலை, ஃபோர்ட் கேனிங் சுரங்கச் சாலை ஆகியவற்றில் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.

பெட்ரா பிராங்கா தீவில் பிடிபட்டவர் மீது அத்துமீறல் குற்றச்சாட்டு

இந்தோனீசியாவிலிருந்து தமது படகில் புறப்பட்டு சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த சிங்கப்பூரர் லீ ரோஜர், பெட்ரா பிராங்கா தீவில் இறங்கிவிட்டார்.
இவ்வாண்டு பிப்ரவரி மாதத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தின் மூலம் அத்தீவில் அத்துமீறி நுழைந்ததற்காக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதம் 5ம் தேதி அத்தீவில் நின்று கொண்டிருந்த அந்த ஆடவரை போலிஸ் கைது செய்தது. $5,000 பிணையில் விடுவிக்கப்பட்ட அவர் மீது இரு குற்றச்சாட்டுகள் உள்ளன.
அங்கீகரிக்கப்படாத தரை இறங்கும் பகுதியில் படகிலிருந்து இறங்கியது முதல் குற்றம். அனுமதியின்றி பாதுகாக்கப்படும் இடத்தில் இருந்தது 2வது குற்றம்.

சிங்கப்பூர் கணிவு இயக்கத்தின் புதிய தலைவராக கோ போ தியோங்

சிங்கப்பூர் கணிவு இயக்கத்துக்குப் புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன் தலைவராகக் கடந்த 12 ஆண்டுகள் சேவையாற்றிய திரு நோயல் ஹான் புதிய தலைவருக்கு வழி விட்டிருக்கிறார் என்று தகவல் தொடர்பு கலைகள் அமைச்சு தெரிவித்திருக்கிறது.
நோயல் உலகக் கணிவு இயக்கத்துக்கும் தலைவராக இருந்திருக்கிறார். அவருக்குப் பதிலாகச் சிங்கப்பூர் கணிவு இயக்கத்தின் புதிய தலைவராக திரு கோ போ தியோங்கை (படம்), தகவல் தொடர்பு கலைகள் அமைச்சர் டாக்டர் லீ பூன் யாங் நியமித்தார். திரு கோ, ஏஷியா பசிபிக் புருவரிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகவும் இருக்கிறார்.

செந்தோசாவில் ஜூலை முதல் ரொக்கமில்லா கட்டண அனுமதி

வரும் ஜூலை மாதம் 1ம் தேதியிலிருந்து செந்தோசா தீவுக்குச் செல்வோர் ரொக்கமில்லா கட்டண முறையைப் பயன்படுத்துவார்கள். வாகனங்களில் உள்ள ‘ஐயு’ கருவிகள் மற்றும் ரொக்க அட்டைகள் மூலம் நுழைவுக் கட்டணம் கழித்துக் கொள்ளப்படும் என்றும் செந்தோசா வளர்ச்சி கழகம் தெரிவித்தது.
தற்போதுள்ள இடத்தில் இருக்கும் கட்டண வசூல் கூடாரங்கள் சுமார் 400 மீட்டருக்கு அப்பால் அதாவது செந்தோசா பாலத்தைத் தாண்டி அமைக்கப்படும்.

Syndicate content
Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838