ஒளிபரப்புத் துறையில் முத்திரை பதித்த திரு சந்திரமோகனின் மறைவால் ஆழ்ந்த துயரம் அடைவதாக அவரின் மனைவி திருவாட்டி சந்திரமோகன் நிர்மலாவுக்கு அனுப்பிய இரங்கல் கடிதத்தில் பிரதமர் திரு லீ சியன் லூங் குறிப்பிட்டிருக்கிறார்.
நுட்பமான அரசியல் அறிவுபெற்ற திரு சந்திரமோகன், மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர் பிரிந்தபோது
9 ஆகஸ்ட் 1965 அன்று மதியுரை அமைச்சர் அளித்த தொலைக்காட்சி செய்தியாளர் கூட்ட நிகழ்ச்சியை தயாரித்தார் என்று திரு லீ குறிப்பிட்டார்.
அதோடு, பல ஆண்டுகளாகத் தேசிய தின கூட்டங்களின் தயாரிப்பையும், நமது பொதுத் தேர்தல் செய்திகளையும் மேற்பார்வையிட்டார்.
திரு சந்திராவை 1980களில் தனக்குத் தெரியவந்ததாகப் பிரதமர் கடிதத்தில் குறிப்பிட்டார். அப்போது சிங்கப்பூர் ஒளிபரப்புக் கழகத்தின் நடப்பு விவகாரப் பிரிவுக்கு அவர் பொறுப்பேற்றி இருந்தார்.
நடப்பு விவகாரங்களை யும் அரசியல் விவகாரங்களையும் விளக்கிச் சொல்லவும் கலந்து பேசவும் தொலைக்காட்சியை அதிகமாகப் பயன்படுத்த வேண்டிய அவசியம் அப்போது எழுந்ததாகத் திரு லீ கடிதத்தில் எழுதியிருந்தார்.
சிங்கப்பூர் ஒளிபரப்புக் கழகம் “டுடே இன் பார்லிமென்ட்” எனும் நிகழ்ச்சியைத் தொடங்கியது. பல மணி நேர விவாதத்தை 45 நிமிடத் தொலைக்காட்சி நிகழ்ச்சியாக அதே நாளில் தயாரிக்கும் மிகச் சிரமமான பணி இது.
அதற்குமுன் நாடாளுமன்ற விவாதங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவில்லை. ஆனால், திரு சந்திரா இந்நிகழ்ச்சிகளின் தயாரிப்பைத் தாமே கவனித்து, அவை தெளிவாகவும் நடுநிலை யாகவும் இருப்பதை உறுதிப்படுத்தியதாகத்
திரு லீ சுட்டிக்காட்டினார்.
திரு லீ பங்கெடுத்த சில நிகழ்ச்சிகளையும் திரு சந்திரா தயாரித்துள்ளார்.
ஒருமுறை, ஸ்டூடியோவில் நடந்த கலந்துரையாடல் திட்டமிட்ட நேரத்தைவிடக் கூடுதல் நேரம் நடந்ததாகத் திரு லீ நினைவுகூர்ந்தார். கலந்துரையாடலில் இடம்பெற்ற எல்லாமே அவசியமானவை என்பதால், நேரத்தைச் சுருக்குவது சிரமமாக இருக்கும் என திரு சந்திரா விடம் கூறினார் திரு லீ. ஆனால், சீரிய அனுபவம் பெற்ற அவர், அணுக்கமாகக் கவனித்தால் சில பகுதிகளை நீக்கமுடியும் என்று பதிலளித்தார்.
அவர் சொன்னது சரியாக இருந்ததாகக் குறிப்பிட்டார் திரு லீ.
திரு சந்திரா மீடியாகார்ப் நிறுவனத்தி லிருந்து ஓய்வுபெற்ற பிறகும் தொடர்ந்து உதவி செய்ததாகத் திரு லீ தெரிவித்தார்.