fontsize: 60% 70% 80% 90%

சிங்கப்பூர்

மருத்துவர் 6 மாத இடைநீக்கம்

மருத்துவர் ஒருவர் சிங்கப்பூர் மருத்துவ மன்றத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் 6 மாத காலம் பணி செய்ய தடையும், தொழில் நிபுணத்துவ நன்னடத்தையை மீறியதற்காக $6,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.

ஹவ்காங் ஸ்திரீட் 22ல் உள்ள புளோக் 246ல் உள்ள கேடி நிங் மருந்தகத்தில் டாக்டர் நிங் குவெய் டியோ புரிந்ததான குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

பள்ளிகளில் நிதியறிவை வளர்க்க $760,000 கூடுதல் நிதி

பள்ளிகளில் நிதியறிவை வளர்க்கும் திட்டத்திற்காகக் கூடுதல் பணம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதுவரை $1 மில்லியன் நிதி பெற்றிருக்கும் சிட்டி - தேசிய கல்விக் கழக நிதியறிவுத் திட்டத்திற்குக் கூடுதலாக $760,000 நிதி ஒதுக்கப்படுகிறது. தேவைகளுக்கும் விருப்பங்களுக்கும் இடையிலான வேறுபாட்டைக் கற்றுக் கொள்ளுதல் போன்ற அடிப்படை நிதித் திறன்களை மாணவர்களிடம் வளர்ப்பது நிதியறிவுத் திட்டத்தின் நோக்கம். எதிர்வரும் 2012ம் ஆண்டுக்குள் 400,000 மாணவர்களும் 5,000 ஆசிரியர்களும் இத்திட்டத்தில் பலனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நிதியறிவுத் தூதர்களாகப் பொறுப்பேற்க உதவும் புதிய வழிகாட்டித் திட்டம் இவ்வாண்டு அறிமுகமாகும். இந்த ஆசிரியர்கள் தங்களது சக ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயிற்சியளிப்பதற்குத் தேவையான திறன்களைக் கற்றுக் கொள்வார்கள்.

சந்திரமோகன் மறைவுக்குப் பிரதமர் இரங்கல்

ஒளிபரப்புத் துறையில் முத்திரை பதித்த திரு சந்திரமோகனின் மறைவால் ஆழ்ந்த துயரம் அடைவதாக அவரின் மனைவி திருவாட்டி சந்திரமோகன் நிர்மலாவுக்கு அனுப்பிய இரங்கல் கடிதத்தில் பிரதமர் திரு லீ சியன் லூங் குறிப்பிட்டிருக்கிறார்.

நுட்பமான அரசியல் அறிவுபெற்ற திரு சந்திரமோகன், மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர் பிரிந்தபோது
9 ஆகஸ்ட் 1965 அன்று மதியுரை அமைச்சர் அளித்த தொலைக்காட்சி செய்தியாளர் கூட்ட நிகழ்ச்சியை தயாரித்தார் என்று திரு லீ குறிப்பிட்டார்.

அதோடு, பல ஆண்டுகளாகத் தேசிய தின கூட்டங்களின் தயாரிப்பையும், நமது பொதுத் தேர்தல் செய்திகளையும் மேற்பார்வையிட்டார்.

திரு சந்திராவை 1980களில் தனக்குத் தெரியவந்ததாகப் பிரதமர் கடிதத்தில் குறிப்பிட்டார். அப்போது சிங்கப்பூர் ஒளிபரப்புக் கழகத்தின் நடப்பு விவகாரப் பிரிவுக்கு அவர் பொறுப்பேற்றி இருந்தார்.

நடப்பு விவகாரங்களை யும் அரசியல் விவகாரங்களையும் விளக்கிச் சொல்லவும் கலந்து பேசவும் தொலைக்காட்சியை அதிகமாகப் பயன்படுத்த வேண்டிய அவசியம் அப்போது எழுந்ததாகத் திரு லீ கடிதத்தில் எழுதியிருந்தார்.

சிங்கப்பூர் ஒளிபரப்புக் கழகம் “டுடே இன் பார்லிமென்ட்” எனும் நிகழ்ச்சியைத் தொடங்கியது. பல மணி நேர விவாதத்தை 45 நிமிடத் தொலைக்காட்சி நிகழ்ச்சியாக அதே நாளில் தயாரிக்கும் மிகச் சிரமமான பணி இது.

அதற்குமுன் நாடாளுமன்ற விவாதங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவில்லை. ஆனால், திரு சந்திரா இந்நிகழ்ச்சிகளின் தயாரிப்பைத் தாமே கவனித்து, அவை தெளிவாகவும் நடுநிலை யாகவும் இருப்பதை உறுதிப்படுத்தியதாகத்
திரு லீ சுட்டிக்காட்டினார்.

திரு லீ பங்கெடுத்த சில நிகழ்ச்சிகளையும் திரு சந்திரா தயாரித்துள்ளார்.
ஒருமுறை, ஸ்டூடியோவில் நடந்த கலந்துரையாடல் திட்டமிட்ட நேரத்தைவிடக் கூடுதல் நேரம் நடந்ததாகத் திரு லீ நினைவுகூர்ந்தார். கலந்துரையாடலில் இடம்பெற்ற எல்லாமே அவசியமானவை என்பதால், நேரத்தைச் சுருக்குவது சிரமமாக இருக்கும் என திரு சந்திரா விடம் கூறினார் திரு லீ. ஆனால், சீரிய அனுபவம் பெற்ற அவர், அணுக்கமாகக் கவனித்தால் சில பகுதிகளை நீக்கமுடியும் என்று பதிலளித்தார்.

அவர் சொன்னது சரியாக இருந்ததாகக் குறிப்பிட்டார் திரு லீ.

திரு சந்திரா மீடியாகார்ப் நிறுவனத்தி லிருந்து ஓய்வுபெற்ற பிறகும் தொடர்ந்து உதவி செய்ததாகத் திரு லீ தெரிவித்தார்.

டாக்டர் கோ கெங் சுவீ பெயரில் இரு பயிலகங்கள்

இந்த ஆண்டு மே மாதம் மறைந்த சிங்கப்பூரின் நிர்மாணத் தலைவர் டாக்டர் கோ கெங் சுவீ நினைவாக, இரு கல்வி நிலையங்களுக்கு அவரது பெயர் சூட்டப்பட வுள்ளது.
1. சிங்கப்பூர் மூத்த ராணுவ அதிகாரிகள் பயிலகம் (SCSC) ‘கோ கெங் சுவீ மூத்த அதிகாரிகள் பயிலகம்’ எனப் பெயர் மாற்றம் பெறும்.

2. கல்வி அமைச்சின் ஆங்கிலம், உடற்பயிற்சி, விளையாட்டு, கலைகளுக் கான புதிய சிங்கப்பூர் ஆசிரியர், நிபுணத்துவப் பயிலகம், ‘கோ கெங் சுவீ கல்வி மையம்’ எனப் பெயர் பெறுகிறது.

சிங்கப்பூர் ஆயுதப் படையை உருவாக்க முக்கிய காரணமானவர் கோ கெங் சுவீ. தளவாடங்களுடன் எதிராளிகளை வெல்லக் கூடிய திறன் மிக்க படையினரையும் அவர் உருவாக்கினார்.
அதேபோல் கல்வித் துறையைச் சீரமைத்தவர் டாக்டர் கோ. எனவே இத்துறைகளில் அவர் பெயரில் பயிலகங்கள் அமைவது பொருத்தமானது என திரு லீ குறிப்பிட்டார்.
தேசிய நாள் பேருரையில் சிங்கப்பூரின் நிர்மாணத் தலைவர்கள் பற்றியும் பிரதமர் லீ குறிப்பிட்டுப் பேசினார்.

தேசிய சேவை அங்கீகார விருது

சிங்கப்பூர் தேசிய சேவையாளர்களின் பங்களிப்பையும் தியாகங்களையும் அங்கீகரிக்கும் வகையில் புதிய தேசிய சேவை அங்கீகார விருது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விருதின் மூலம் ஒவ்வொரு தேசிய சேவையாளருக் கும் $9,000 வழங்கப்படும். ஆணையாளர்களுக்குக் கூடுதல் தொகை வழங்கப்படும். இந்தத் தொகையை அவர்கள் கல்விக்கும் வீடு வாங்குவதற்கும் பயன்படுத்தலாம்.

தேசிய சேவையை முடித்த நிரந்தரவாசிகள் சிங்கப்பூர் குடியுரிமையைப் பெற்ற பிறகு அவர்களுக்கும் இந்த விருது வழங்கப்படும். இந்த விருது குறித்த மேல் விவரங்களை தற்காப்பு அமைச்சு விரைவில் அறிவிக்கும்.

தேசிய சேவையாளர்களுக்கான தனிநபர் உடலுறுதி சோதனை முறையும் தானியக்க மயமாக்கப்பட்டுள்ளது.

இதனால் சோதனையை நடத்தும் பயிற்றுவிப்பாளர் எண்ணிக்கை பெரிதும் குறைக்கப்பட்டுள்ளது என்று
பிரதமர் லீ தமது பேருரையில் கூறினார்.

ரயில் சேவைக்கு $60 பில்லியன்

அடுத்த 10 ஆண்டுகளில் சிங்கப்பூரின் ரயில் கட்டமைப்பை இரட்டிப்பாக்க $60 பில்லியனை அரசு செலவிட உள்ளது என பிரதமர் லீ சியன் லூங் தமது தேசிய நாள் பேருரையில் தெரிவித்தார்.

டவுன்டவுன், தாம்சன், கிழக்கு வட்டார ரயில் சேவைகள் ஆகிய புதிய பாதைகள் இந்த புதிய ரயில் கட்டமைப்புத் திட்டத்தில் அடங்கும்.

சிங்கப்பூரர்கள் போக்குவரத்தில், குறிப்பாக காலை வேளைகளில் எதிர்நோக்கும் நெரிசல் பிரச்சினைகள் தமக்குப் புரிகிறது என்ற பிரதமர் வட்ட ரயில் பாதை நிலைமையை மேம்படுத்த உதவி உள்ளது என்றார்.

வட- கிழக்கு ரயில் பாதையில் உச்ச நேரத்தில் கூடுதல் ரயில் சேவைகளை அடுத்த ஆண்டுக்குள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இன்னும் அதிகமான ரயில்கள் வாங்கப்படும். தற்போதைய கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.

நிலைமையை மேம்படுத்த அரசு தன்னால் முடிந்தவரை செய்து வருகிறது என்றும் ஆனால் உச்ச நேரத்தில் எம்ஆர்டி ரயில்களில் போக்குவரத்து நெரிசல் எப்போதும் இருக்கவே செய்யும் என்பதையும் சிங்கப்பூரர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த நிலை அனைத்து நகரங்களிலும் நிலவுகிறது. தயவு செய்து பொறுத்திருங்கள். ஒவ்வொரு பிரயாணியும் முதல் ரயிலிலேயே ஏறுவதை உத்தரவாதம் செய்ய முடியாது, ஆனால் அடுத்த ரயில் இன்னும் சில நிமிடங்களில் வந்துவிடும், என்று பிரதமர் லீ கூறினார்.

தொழில்நுட்ப, வழக்கநிலை மாணவர்கள் மேம்பாட்டுக்குப் புதிய திட்டங்கள்

அனைத்து நிலையிலும் மாணவர்களின் திறன் வளர்ச்சிக்கு உதவும் வகையில் கல்வித் துறையின் மேம்பாட்டுத் திட்டங்களைப் பிரதமர் லீ அறிவித்துள்ளார். சிங்கப்பூரின் மூன்றாவது மருத்துவக் கல்லூரி, வழக்க நிலை (தொழில்நுட்ப) மாணவர்களுக்கான சிறப்புப் பள்ளிகள், $70 மில்லியனில் பலதுறைத் தொழில் கல்லூரிகள் மேம்பாடு, என ஏராள புதிய திட்டங்களை அவர் விளக்கினார்.

அவை சுருக்கமாக: தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களை ‘முழுமையாக’ உருவாக்க மென் திறன்களில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது. உடற்பயிற்சி, ஓவியம், இசைத் துறை படிப்புகளின் மேம்பாட்டில் கவனம். இத்துறைகளுக்கு அதிக நிபுணத்துவ ஆசிரியர்கள் சேர்க்கப்படுவர்.மேலும் 7 பள்ளிகளில் ஐபி திட்டம்n மேலும் ஏழு பள்ளிகளில் ஒருங்கிணைந்த பாடத்திட்டம் (ஐபி) அறிமுகப்படுத்தப்படவுள்ளது. தற்போது 11 பள்ளிகளில் இந்த பாடத்திட்டம் நடப்பில் உள்ளது. தொடக்கப்பள்ளி இறுதி ஆண்டுத் தேர்வுக்குப் (பிஎஸ்எல்ஈ) பின் இத்திட்டத் தில் சேர முடியாதவர்களும் உயர்நிலைப் பள்ளிப் படிப்பின்போது இத்திட்டத்தில் சேர வாய்ப்பு.

வழக்கநிலை மாணவர்களுக்கு புதிய பள்ளி, பலதுறை தொழில் கல்லூரியில் நேரடி சேர்ப்புn ஏட்டுக் கல்வியில் தேர்ச்சி பெற முடியாத மாணவர்கள் தொழில் கல்வியில் திறன் பெற மேலும் வாய்ப்புகள். பிடோக் டவுன், ஷூகுன், சீ லிங் உயர்நிலைப் பள்ளிகளில் வழக்கநிலை (தொழில்நுட்பம்) படிப்பு மேம்படுத்தப்படும்.பிஎஸ்எல்ஈ தேர்வில் தேர்ச்சி பெற முடியாத மாணவர்களுக்கான நார்த்லைட் பள்ளி, அசெம்ஷன் பாத்வே பள்ளிகளைப் போல, வழக்கநிலை (தொழில்நுட்பம்) மாணவர்களுக்காக மேலும் இரு சிறப்புப் பள்ளிகள் உருவாக்கம்.

$700 மில்லியனில் பலதுறைத் தொழில் கல்லூரிகள் மேம்படுத்தப்படும். முன்பைவிட தற்போது அதிகமாக மாணவர்கள் பலதுறைத் தொழில் கல்வியை விரும்பிப் படிக்கின்றனர்.

வழக்கநிலை (சாதாரணம்) மாணவர்கள் ‘ஓ’ நிலைத் தேர்வு இன்றி, நேரடியாக பலதுறை தொழில் கல்லூரியில் சேர வாய்ப்பு. ஓ நிலைக்குப் பதிலாக அவர்கள் பலதுறை தொழில் கல்லூரியில் ஓராண்டு காலம் அடிப்படை அறிமுகத் தொழில் கல்வியைப் பெறுவர்.மூன்றாவது மருத்துவக் கல்லூரி

சிலி சுரங்கத்தினுள் சிக்கி தவிக்கும் ஊழியர்களின் மனநிலை

சிலி சுரங்கத்தினுள் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக சிக்கியிருக்கும் 33 சுரங்க ஊழியர்களில் சிலர் நம்பிக்கை இழந்து சோர்வடைந்திருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

பூமியிலிருந்து 700 கிலொ மீட்டர் ஆழத்தில் சிக்கிக்கொண்டிருக்கும் சுரங்க ஊழியர்களில் 5 பேர் சரியாக சாப்பிடுவதில்லை என்றும் வீடியோ படம் எடுப்பதற்கு அவர்கள் மறுத்து தெரிவித்ததாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சர் ëஜய்மி மனாலிக் கூறினார்.

துளை போடும் இயந்திரம் மூலம் தோண்டப்பட்ட குழி வழியாக சுரங்க ஊழியர்களுக்கு தற்போது உணவும் தண்ணீரும் அனுப்பப்பட்டு வருகின்றன.

அந்த துளை வழியாக அனுப்பப்பட்ட வீடியோ கேமிரா மூலம் சுரங்கத்தினுள் சிங்கிக் கொண்டிருக்கும் ஊழியர்களின் நிலையை அறிந்து கொள்ள முடிகிறது என்று அந்த அமைச்சர் சொன்னார்.

இளையர்களைத் தலைவர்களாக்க முற்படும் சிண்டா இளையர் மன்றம்

- ஷா. அபிடா பேகம் -

சிண்டா எனும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் அதன் இளையர் மன்றத்தை நேற்று தொடங்கியது.

இளையர்களைப் பலதரப்பட்ட பயனுள்ள நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்தி சமூகத்தில் அவர்களைச் சிறந்த தலைவர்கள் ஆக்க முனைகிறது சிண்டாவின் இளையர் மன்றம். இளையர்களே பிற இளையர்களுக்கு நல்லதொரு உதாரணமாகவும் வழிகாட்டியாகவும் இருக்க உதவுகிறது சிண்டா இளையர் மன்றம்.

2009ம் ஆண்டின் இறுதியில் பல இளையத் தொண்டூழியர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட சிண்டாவின் இளையர் மன்றம், நற்பணிப் பேரவை, இளையர் சீக்கியர் சங்கம், தேசிய இளையர் மன்றம், சிங்கப்பூர் இந்திய வர்த்தக தொழில் சபை ஆகியவற்றின் இளையர் மன்றங்களுடன் தேசிய இளையர் மன்றம், தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் ஆகிய இந்தியர் அல்லாத அமைப்புகளின் இளையர் குழுக்களுடன் கை கோர்த்துக் கொண்டது.

உருவாக்கப்பட்டதிலிருந்து இதுவரை பல பயிலரங்குகள், கலந்துறையாடல்கள் போன்ற நடவடிக்கைகள் வழி கிட்டத்தட்ட 300 இளையர்களை எட்டியுள்ளது சிண்டா இளையர் மன்றம்.
இளையர் மன்றத்துக்குத் தலைவராகப் பொறுபேற்று நடத்துபவர் சிண்டாவின் நிர்வாகக் குழு உறுப்பினர் திரு ஏரன் மணியம்.

ரிபப்ளிக் பலதுறை தொழில் கல்லூரியின் கலாசார மையத்தில் நேற்று நடந்தேறிய விழாவில் இளையர்களுக்காக ஒரு நாள் முழுவதும் பல அங்கங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

தொடக்கக் கல்லூரி மாணவர்கள் பல்கலைக்கழகத்தைப் பற்றி அறிந்து கொள்ள பயிலரங்கு, சுறுசுறுப்பான விளையாட்டுகளில் ஆர்வம் காட்டும் இளையர்களுக்காக ‘அட்டேக்காமா’ நடவடிக்கை, சமூகத்தில் சேவை செய்ய விரும்பும் இளையர்களுக்கு ஔர் அங்கம், உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு அங்கம் போன்றவை அவற்றுள் சில.

சுமார் ஔர் ஆண்டு ஏற்பாடுகளுக்குப் பின் சிண்டாவின் இளையர் மன்றத்தை நேற்று அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார் துணைப் பிரதமரும் தற்காப்பு அமைச்சருமான டியோ சீ ஹியன்.

பங்கு பெற்ற போட்டியாளர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார் திரு டியோ.
சிண்டாவின் இளையர் மன்றத்தைப் பற்றி மேலும் தகவல்கள் பெற puvana@ sinda.org.sg, sutha@sinda.org.sg என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

மாணவர்களிடையே எழுத்தாற்றலை வளர்க்க உதவிய போட்டிகள்

இன்றைய உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடம் தமிழ் எழுத்து ஆற்றலை வளர்க்க உதவும் வகையில் கல்வி அமைச்சின் பாடத்திட்ட வரைவு மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் தமிழ்மொழிப் பகுதி இம்மாதம் 22ம் தேதியன்று சிறுகதை, கட்டுரை போட்டிகளை நடத்தியது.

இந்தப் போட்டிகளில் 93 உயர்நிலைப் பள்ளிகளிலிருந்து 156 மாணவர்கள் பங்கேற்றனர் என்று தமிழ் முரசிடம் விளக்கினார் போட்டிகள் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் திரு தியாகராஜன் பூபதி.
கீழ் உயர்நிலை மற்றும் மேல் உயர்நிலை என்று இரு பிரிவுகளாகப் போட்டிகள் நடத்தப் பட்டன.
மேல் உயர்நிலை மாணவர்கள் சிறுகதை எழுதினார்கள்.

கீழ் உயர்நிலை மாணவர்கள் கொடுக்கப்பட்ட பல படங்களைக் கொண்டு கட்டுரை எழுதினார்கள்.
ஒவ்வொரு பிரிவிலிருந்தும் முதல் மூன்று சிறப்பு பரிசுகளும் ஏழு ஊக்கப்பரிசுகளும் வழங்கப்பட்டன.

உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்குச் சிறப்பு விருந்தின ராக வந்திருந்தார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழி மற்றும் இலக்கியப் பிரிவின் இணைப் பேராசிரியர் டாக்டர் சித்ரா சங்கரன்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டாக்டர் சித்ரா சங்கரன் பரிசுகளை வழங்கினார்.
இரு பிரிவுகளிலும் வெற்றி பெற்ற முதல் இரண்டு மாணவர்கள் போட்டிகளில் தாங்கள் பெற்ற அனுபவத்தை மற்ற மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் கலந்துரையாடல் அங்கமும் நேற்று நடத்தப்பட்டது.

அந்த அங்கத்தை வழி நடத்தியவர் உள்ளூர் எழுத்தாளரும் டேயி உயர்நிலைப் பள்ளி தமிழாசிரியருமான திருமதி வீரப்பன் லட்சுமி.

மாணவர்களிடையே தமிழ் மொழி புழக்கத்தின் வளர்ச்சிக்கும் அவர்களின் எழுத்தாற்றல் வளர்ச்சிக்கும் இப்படிப் பட்ட போட்டிகள் உறுதுணையாக இருந்து வருகின்றன என்றும் கருத்துரைத்தார்திரு பூபதி.

Syndicate content
Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838