fontsize: 60% 70% 80% 90%

உலகம்

முக்கிய ஜமா இஸ்லாமியா போராளி கொல்லப்பட்டார்

ஜகார்த்தா
பாலித் தீவில் 2002ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாகத் தேடப்பட்டு வந்த முக்கிய போராளி ஒருவரை இந்தோனீசியப் போலிசார் சுட்டுக் கொன்றுவிட்டதாக நம்பப்படுகிறது.
இஸ்லாமியப் போராளிகளுக்கு எதிராக இந்தோனீசியா நடத்திவரும் போராட்டத்தில் இவரது மரணம் முக்கிய அங்கம் வகிக்கக்கூடும் என்று போலிசாரும் ஆய்வாளர்களும் நேற்று கூறினர்.
பன்டன் மாவட்டத்தின் பமுலாங் வட்டாரத்தில் போலிசார் திடீர் சோதனைகள் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஹாங்காங்கில் மீண்டும் அமிலத் தாக்குதல்

ஹாங்காங்
ஹாங்காங்கில், ஒரே வட்டாரத்தில், ஆறு மாதங்களில் நான்காவது முறையாக, அமிலம் நிரப்பப்பட்ட பீர் போத்தல் தெருவில் வீசப்பட்டதாகப் போலிசார் நேற்று தெரிவித்தனர். இத்தாக்குதல்கள் அனைத்துக்கும் ஒருவரே பொறுப்பாக இருக்கக்கூடும் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
சென்ற 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல், ஹாங்காங்கில் நடந்திருக்கும் 12வது தாக்குதல் இது. இவற்றில் எட்டு தாக்குதல்கள் நகர்ப்பகுதிகளிலும், மூன்று தாக்குதல்கள் புதிய வட்டாரங்களிலும் நடந்தன. தாக்குதல்களில் இதுவரை 100க்கும் அதிகமானோர் காயமடைந்ததாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் பத்திரிகை தெரிவித்தது.

டால்ஃபின் வேட்டை பற்றிய விளக்கப்படம் ஜப்பானில் திரையிடக்கூடும்

தோக்கியோ
ஜப்பானிய மீன்பிடி கிராமத்தில் டால்ஃபின்கள் கொடூரமான முறையில் வேட்டையாடப்படுவதைக் காட்டும் “The Cove” எனும் விளக்கப்படம் ஆஸ்கர் விருதை வென்றதைத் தொடர்ந்து, ஜப்பானில் படம் திரையிடப்படும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது.
இப்படத்தைப் பற்றி ஜப்பானியர்கள் பலரும் கேள்விப்படாததால், ஆகச்சிறந்த விளக்கப் படத்திற்கான ஆஸ்கர் விருதை இப்படம் வென்ற செய்தி அவர்களுக்கு வியப்பளித்தது.

மத்தியக் கிழக்கில் ஜோ பைடன்

ஜெருசலம்
இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனர்களும் மீண்டும் பேச்சு வார்த்தையைத் தொடங்கச்செய்யும் நோக்கத்துடன் அமெரிக்கத் துணை அதிபர் ஜோ பைடன் திங்கட்கிழமை இஸ்ரேல் சென்று சேர்ந்தார்.
பைடனின் நான்கு நாள் வருகையின்போது, ஈரானின் அணுவாயுதத் திட்டத்தை ஒடுக்குவதில் அமெரிக்கா கடப்பாடு கொண்டிருப்பதாக இஸ்ரேலியத் தலைவர்களுக்கு பைடன் உறுதியளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வியாழக்கிழமை டெல் அவிவ் நகரில் உரையாற்றும்போது, இஸ்ரேலியப் பொதுமக்களின் ஆதரவையும் அவர் திரட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குண்டுவெடிப்புகளுக்கு இடையே தேர்தல்

பீரங்கிக் குண்டுகளும் மற்ற வகையான குண்டுகளும் ஈராக் தலைநகர் பாக்தாத்தை உலுக்க அந்நாட்டில் நேற்று இரண்டாம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.
ஈராக்கில் 2003ம் ஆண்டில் முன்னாள் சர்வாதிகாரி சதாம் ஹுசேனைப் பதவியில் இருந்து வீழ்த்திய பின் நடைபெறும் இரண்டாவது நாடாளு மன்றத் தேர்தல் இது.
இந்தத் தேர்தலை சீர்குலைக்க அல் காய்தா பயங்கரவாத இயக்கம் ஏற்கனவே எச்சரித்திருந்தது.
அதுபோல் ஈராக்கிய மக்களையும் அவ்வியக்கம் தேர்தலில் பங்கேற்க வேண்டாமென்று எச்சரிக்கை விடுத்து ஆங்காங்கே துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வந்தது.

சிறுவன் மரணம் தொடர்பாக இந்திய ஆடவர் கைது

ஆஸ்திரேலியாவில் குர்ஷன் சிங் என்ற மூன்று வயதுச் சிறுவன் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தொடர் பாக குர்சேவாக் தில்லன் என்ற இந்திய ஆடவர் ஒருவர் கைதாகி யுள்ளார் என்று ஏஎப்பி தகவல் கூறுகிறது.
முன்னதாக, அந்தச் சிறுவனுடைய உடல் கண்டெடுக் கப்பட்ட இடத் துக்கு அருகே ஒரு பச்சை நிறக் கார் ஒன்று வியாழக் கிழமை தென்பட்ட தாககூறப்படுகிறது.
இந்த மரணம் தொடர்பான விசாரணையை மேற்கொண்டுள்ள போலிசார் அந்தக் கார் பற்றிய தகவல் அறிந்தவர் யாராக இருந்தாலும் அவர்களுடன் தாங்கள் தொடர்பு கொள்ள விரும்புவதாகத் தெரிவித்திருந்தனர்.

ஆஸ்திரேலியாவில் சூறாவளிப் புயல், வெள்ளம்

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் சனிக்கிழமை ஆலங்கட்டி மழையுடன் கூடிய சிறிய அளவிலான சூறாவளிப் புயல் அடித்தது.
இதைத் தொடர்ந்து அங்கு முழு அளவிலான சூறாவளிப் புயலுடன் கூடிய மழை, வெள்ளம் வரும் என்ற அச்சத்தில் அங்குள்ள மக்கள் தங்களைத் தயார் நிலையில் வைத்துக்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
சனிக்கிழமை பெய்த சூறாவளிப் புயலுடன் கூடிய மழையில் விக்டோரியா மாநிலத்தில் ஏறக்குறைய 100,000 வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக ஏஎப்பி செய்தித் தகவல் கூறுகிறது.
கனத்த மழை பெய்த மெல்பர்ன் நகரில் 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் கார்டன் பிரவுன்

ஈராக் போர் தொடர்பான விசாரணையில் பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் சாட்சியம் அளித்தார்.
இது தற்பொழுது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
அந்த சர்ச்சை ஓய்வதற்குள் அவர் சூறாவளி வேகத்தில் நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தமது நாட்டுப் படையினரைக் காணச் சென்றுள்ளார்.
தென் ஆப்கானிஸ்தானில் பிரிட்டிஷ் படையினரை சந்தித்த அவர், மிக விரைவில் சாலையோர குண்டுகளில் இருந்து பாதுகாக்கும் ரோந்து வாகனங்கள் அவர்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

ஒபாமா: வேலை வாய்ப்பு நிலவரம் இன்னும் மேம்பட வேண்டும்

அமெரிக்காவின் வேலை வாய்ப்பு நிலவரம் எதிர்பார்த்ததைவிட மேம்பட்டிருந்தாலும், சகித்துக்கொள்ளக்கூடிய நிலையை இன்னும் அடையவில்லை என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியிருக்கிறார்.
வேலையின்மை விகிதம் அமெரிக்காவில் இன்னும் அதிகமாகவே இருப்பதாகவும் ஆனால் வேலை வாய்ப்பு நிலவரம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் மேம்பட்டிருப்பதாகவும் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட வேலை வாய்ப்பு பற்றிய அறிக்கை கூறுகிறது. வேலையின்மை விகிதம் முந்திய மாதத்திலிருந்து மாறாதிருந்தாலும், பல மில்லியன் அமெரிக்கர்களுக்கு இன்னும் வேலை இல்லை.
வேலையின்மை விகிதம் மாறாமல் நிலையாக இருப்பது போதாது என்றும் ஒபாமா குறிப்பிட்டிருக்கிறார்.

வம்புக்கு இழுக்கப்பட்ட ஜப்பானிய இளவரசி

தோக்கியோ பள்ளியில் மாணவர்கள் சிலர் தன்னை வம்புக்கு இழுத்ததாகப் புகார் செய்த ஜப்பானிய இளவரசி அய்கோ, சென்ற வாரத் தொடக்கத்திலிருந்து பள்ளிக்குச் செல்லவில்லை என்று அரசக் குடும்ப அதிகாரி தெரிவித்திருக்கிறார். எட்டு வயதாகும் இளவரசி, பள்ளியிலிருந்து கவலையுடன் வீடு திரும்பியதாகவும், வயிறு வலிப்பதாகக் கூறியதாகவும் அவர் தெரிவித்தார். இளவரசியும் அவளது வகுப்பிலிருந்த மற்ற சில மாணவர்களும் மற்றொரு வகுப்பிலுள்ள சில சிறுவர்களால் “கடுமையாக நடத்தப்பட்டதாக” அவர் கூறினார். பட்டத்து இளவரசர் நருஹிட்டோ, இளவரசி மசாகோ ஆகியோரின் மகளான அய்கோ, தோக்கியோவிலுள்ள ககுஷுன் தொடக்கப்பள்ளியில் படிக்கிறார்.
Syndicate content
Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838