fontsize: 60% 70% 80% 90%

உலகம்

இஸ்ரேலைக் கண்டித்தார் கிளின்டன்

வாஷிங்டன்
கிழக்கு ëஜருசலத்தில் புதிய குடியேற்றங்களை அமைக்க இஸ்ரேல் அண்மையில் எடுத்த தீர்மானத்தை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லரி கிளின்டன் வன்மையாகக் கண்டித்திருக்கிறார்.
அமெரிக்க-இஸ்ரேலிய உறவைப் பொறுத்தவரை இது “மிகவும் எதிர்மறையான” செயல் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவிடம் 43 நிமிட தொலைபேசி அழைப்பின்போது கிளின்டன் கூறினார்.
அமெரிக்கா இஸ்ரேலை இவ்வளவு கடுமையாகக் கண்டிப்பது மிகவும் அரிதான ஒன்றாகும் என்று பிபிசி செய்தி நிறுவனத்தின் வாஷிங்டன் செய்தியாளர் குறிப்பிட்டார்.

பயங்கரவாதத் தடுப்புப் பயிற்சிகள்

ஜகார்த்தா
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் இந்தோனீசிய வருகைக்கு ஒரு வாரம் முன்னதாக, இந்தோனீசியப் போலிசாரும் ராணுவமும் சனிக்கிழமையன்று பயங்கரவாதத் தடுப்புப் பயிற்சிகளை நடத்தின.
தலைநகரிலுள்ள அனைத்துலக விமான நிலையம், பங்குச்சந்தை கட்டடம், சொகுசு ஔட்டல்கள், ஜகார்த்தாவுக்கு வடக்கே அமைந்துள்ள கடற்பகுதி போன்ற பல்வேறு இடங்களில் பயங்கரவாதத் தடுப்புப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
“பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்களைக் கையாளும் திறனை ராணுவத்தினரும் போலிசாரும் வளர்த்துக்கொள்ள இப்பயிற்சிகள் உதவும் என்று நம்புகிறோம்” என்றார் இந்தோனீசிய ராணுவப் பேச்சாளர் சகோம் தம்போன்.

டொயோட்டா மீது கலிஃபோர்னியா வழக்கு

லாஸ் ஏஞ்சல்ஸ்
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநில அரசாங்க வழக்குரைஞர்கள் டொயோட்டா நிறுவனத்தின்மீது வழக்கு தொடுத்துள்ளனர். ஜப்பானின் டொயோட்டா கார் தயாரிப்பு நிறுவனம், வாகனங்களில் கோளாறுகள் இருப்பதை அறிந்திருந்தும் பல்லாயிரக்கணக்கான வாகனங்களை விற்றதாகக் கூறி வழக்கு தொடுக்கப்பட்டது.
உலகின் ஆகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா, வாகனங்களின் பிரேக்கிலும் ஆக்சலரேட்டரிலும் உள்ள பிரச்னைகளால் பல மில்லியன் வாகனங்களை மீட்டுக் கொண்டுள்ளது.

ஆசிய வருகையை ஒத்திவைத்தார் ஒபாமா

வாஷிங்டன்
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆசியப் பயணத்தை மார்ச் 18ம் தேதியிலிருந்து மார்ச் 21ம் தேதிக்கு வெள்ளை மாளிகை ஒத்திவைத்திருக்கிறது.
“தலைமகளும் அதிபரின் மகள்களும் பயணத்தில் இடம்பெறமாட்டார்கள்” என்று வெள்ளை மாளிகை பேச்சாளர் நேற்று தெரிவித்தார்.
பயணம் ஒத்திவைக்கப்பட்டாலும், இந்தோனீசியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் அதிபர் ஒபாமா செல்வார்.
சுகாதாரப் பராமரிப்பு மசோதாவின் வாக்கெடுப்பு அடுத்த வார பிற்பகுதியில் நாடாளுமன்றத்தில் நடக்கும் என்ற நம்பிக்கையில் வெள்ளை மாளிகை அதிகாரிகள் பயணத்தை ஒத்திவைத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் வாக்கெடுப்பு நடப்பது நிச்சயமல்ல.

ரஷ்யாவுடன் இந்தியா ஆயுத ஒப்பந்தம்

இந்தியாவுடனான உறவை மீண்டும் புதுப்பித்துக்கொள்ளும் வகையில் ரஷ்யப் பிரதமர் விளாடிமிர் புட்டின், இந்தியாவுக்கு இரண்டு நாட்கள் அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டு நேற்று புதுடில்லி சென்றார்.
புதுடெல்லி விமான நிலையத்தில் புட்டினுக்கும் அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் உற்சாகமான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
நேற்று இந்திய குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீலையும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கையும் அவர் சந்தித்தார். இந்த வருகையின்போது முக்கிய அம்சமாக 10 பில்லியன் டாலர் மதிப்புள்ள விண்வெளி, மின்சாரம், பாதுகாப்புத்துறை, போன்ற துறை சார்ந்த 12 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப் படவுள்ளன.

ரஷ்யா, அமெரிக்கா புதிய அணுவாயுத உடன்பாடு

மாஸ்கோ
புதிய அணுவாயுதக் களைவு உடன்பாடு தொடர்பான பேச்சு வார்த்தை கருத்துப் பிணக்கால் தடைபட்டிருப்பதாகச் செய்திகள் வெளிவந்தபோதிலும், அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பேச்சு வார்த்தை திட்டமிட்டபடி தொடர்வதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
“கூடிய விரைவில் புதிய உடன்பாட்டில் கையெழுத்திடும் சாத்தியத்தை நிறைவேற்றுவதே இருதரப்பினரும் கொண்டுள்ள நோக்கம்,” என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஆன்ட்ரே நெஸ்டரன்கோ செய்தியாளர்களிடம் கூறினார்.

தாய்லாந்தில் பிரமாண்டமான எதிர்ப்பு ஊர்வலம்

பேங்காக்
வெள்ளிக்கிழமை தொடங்கிய அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் வார இறுதியில் பெரிய அளவில் உருவெடுக்கும் என்று எதிர்பார்த்து தாய்லாந்து அரசாங்கம் ஆயத்தமாகிறது.
வார இறுதியில் 150,000 பேர் வரை தெருக்களில் போராட்டம் நடத்தக்கூடும் என்று எதிர் பார்க்கப்படு வதால், 50,000 பாதுகாப்புப் படையினர் தயார்நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக அரசாங்கப் பேச்சாளர் பனிடன் வட்டநயகோர்ன் தெரிவித்தார்.

ரஷ்யா, அமெரிக்கா புதிய அணுவாயுத உடன்பாடு

மாஸ்கோ
புதிய அணுவாயுதக் களைவு உடன்பாடு தொடர்பான பேச்சு வார்த்தை கருத்துப் பிணக்கால் தடைபட்டிருப்பதாகச் செய்திகள் வெளிவந்தபோதிலும், அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பேச்சு வார்த்தை திட்டமிட்டபடி தொடர்வதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
“கூடிய விரைவில் புதிய உடன்பாட்டில் கையெழுத்திடும் சாத்தியத்தை நிறைவேற்றுவதே இருதரப்பினரும் கொண்டுள்ள நோக்கம்,” என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஆன்ட்ரே நெஸ்டரன்கோ செய்தியாளர்களிடம் கூறினார்.

பேரணிகளை எதிர்கொள்ள பேங்காக்கில் 50,000 வீரர்கள்

தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் தக்சின் ஆதரவாளர்களின் பேரணிகளை எதிர்கொள்ள அந்நாட்டு அரசாங்கம் 50,000 வீர்களை பணியில் அமர்த்தியுள்ளது.
தாய்லாந்தில் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்தராவின் ஆதரவாளர்கள் இன்று முதல் பெருமளவிலான ஆர்ப்பாட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
அவருக்கு எதிரான தீர்ப்பு ஒன்றில் தாய்லாந்தின் உச்சநீதிமன்றம் முடக்கி வைக்கப்பட்ட தக்சினின் சொத்துகளில் 1.4 பில்லியன் டாலர்கள் மதிப்பிலானவற்றை அரசாங்கம் பறிமுதல் செய்ய உத்தரவிட்டது.

பாகிஸ்தான்: துப்பாக்கிக்காரர்கள் தாக்குதலில் 6 பேர் மரணம்

துப்பாக்கிகள், கையெறி குண்டுகளுடன் பாகிஸ்தானின் வட மேற்கு மாநிலத்தில் கிறிஸ்துவ தொண்டூழிய நிறுவனம் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இஸ்லாமாபாத்துக்கு 200 கிலோமீட்டர் வடக்கே உள்ள மன்செரா என்ற கிராமத்தில் நடந்த இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமியப் பேராளிகளே காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதலை கொடூரமானது, புரிந்துகொள்ள முடியாதது என்று வர்ணித்த ‘வோர்ல்ட் விஷன்’ என்ற அந்தத் தொண்டூழிய நிறுவனம் உடனடியாக தனது சேவையை நிறுத்திக்கொண்டது.

Syndicate content
Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838