மலேசிய அரசியல்வாதி ஒருவர் மூன்று குண்டுகள் உடலில் பாய்ந்த நிலையிலும் 200 மீட்டர் ஓடி ஒரு போலிஸ் நிலையத்துக்குள் நுழைந்தார். அந்த அரசியல்வாதி மலேசியாவில் காஜாங் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.
இப்போது அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக மலேசியாவின் தி ஸ்டார் செய்தித்தாள் தெரிவித்தது.
மலேசிய இந்தியர் காங்கிரஸ் இளையர் பிரிவு தலைவர் ஏ கலையரசு.(வயது 40களில்)
இவர், சென்ற புதன்கிழமை மாலை நேரத்தில், இதர இரண்டு பேருடன், ஜாலான் ராஜா ஹருனில் இருக்கும் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்.
கலையரசுவின் மனைவியும் மகளும் உணவகத்தில் காசு கொடுக்கும் இடத்தில் இருந்தனர். அப்போது மோட்டர் சைக்கிள் தலைக்கவசத்தைக் கையில் பிடித்த படி ஒருவர் கலையரசுவை நோக்கி நடந்து வந்தார். வந்தவர், கலையரசுவை நோக்கி திடீரென்று ஐந்து தடவை படபடவென்று துப்பாக்கியால் சுட்டார்.
துப்பாக்கியுடன் ஆடவர் வந்ததைப் பார்த்துவிட்ட கலையரசு எழுந்து ஓடினார்.
என்றாலும் அவர் கையில் ஒரு குண்டு பாய்ந்தது. வயிற்றில் இரண்டு குண்டுகள் பாய்ந்தன. இதர இரண்டு குண்டுகள் சாப்பாட்டு மேசையைப் பதம் பார்த்தன.
என்றாலும் கலையரசு சுதாரித்துக் கொண்டு ஓடி, 200 மீட்டர் தொலைவில் இருக்கும் போலிஸ் நிலையத்துக்குள் புகுந்து உதவி நாடினார். அவரை மருத்துவ மனைக்கு உடனடியாகப் போலிஸ் கொண்டு சென்றது.
இதற்கிடையே, மாலை 6-40 மணிக்கு இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நிகழ்ந்தது என்பதை உதவி போலிஸ் ஆணையாளர் சஹாருதின் ஷிமூத், உறுதிப் படுத்தினார்.
“சம்பவம் நிகழ்ந்தபோது உணவகத்துக்கு வெளியே மோட்டார் சைக்கிளில் ஒருவர் காத்துக்கொண்டு இருந்தார். துப்பாக்கியால் சுட்ட ஆசாமி அந்த மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டார். அந்த வாகனத்தின் பதிவு எண் தெரியவில்லை.
“சம்வத்துக்கான நோக்கம் குறித்து புலன்விசர£ணை நடக்கிறது. பழிக்குப் பழி சம்பவ மாகவும் இது இருக்கக்கூடும்,” என்றார் போலிஸ் அதிகாரி.
“உணவகத்துக்கு அடிக்கடி வருபவர் கலையரசு. தன்னை நோக்கி ஒருவர் வந்ததைப் பார்த்து தப்பித்து ஓடினார் கலையரசு. ஆனால் துப்பாக்கிக்கார ஆடவர், கண் மூடி திறப்பதற்குள் படபட வென்று சுட்டுத் தள்ளினார்.
“கலையரசு காயம் அடைந்து ஓடினார்,” என்று தன் பெயரைக் கூற விரும்பாத காப்பிக் கடை உரிமையாளர் சொன்னார்.