Sunday, January 1st, 2012
இப்படிக்கூட நடக்குமோ என்று வியப்புடன் வாய் மூடும் விரல்களை ஆச்சரியக் குறிகளாக நட்டுவைத்து விடை பெற்றிருக்கிறது 2011.
யானை பலமும் புலியின் வீரமும்கூட சோதனைக்குள்ளாகும் என்பதைச் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறது அந்தப் பொல்லாத ஆண்டு. நமது குடியரசில் 2011 விதைத்த மாற்றங்கள், வரலாற்று ஆச்சரியங்கள்.
1959ல் மக்கள் செயல் கட்சி ஆட்சி பீடத்தில் அமர்ந்த பின்னர் பெரிய அரசியல் மாற்றம் நிகழ்ந்து மக்களின் விழிக் கதவுகளை மேல்நோக்கி உயரச் செய்தது அந்த ஆண்டுதான்.
மே மாத பொதுத் தேர்தலில் ஐவர் கொண்ட அல்ஜுனிட் குழுத் தொகுதியை 9.42% வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் செயல் கட்சி இழந்தது அரசியல் அரங்கில் இதுவரை நடந்திராத ஒன்று.
முன்னணி அமைச்சர்களில் ஒருவரான ஜார்ஜ் இயோ அரசியலிலிருந்து விடைபெற இத்தேர்தல் காரணமாக அமைந்தது.
அல்ஜுனிட் போன்ற தொகுதிகளில் சில வாக்காளர்கள் ஆடி வெள்ளம் போல் பொங்கியதற்கு இரு முக்கிய பிரச்சினை கள் காரணமாகச் சொல்லப்பட்டன. வீடமைப்பு, பொதுப் போக்குவரத்து ஆகியன அவை. விளைவு, பாட்டாளிக் கட்சிக்கு முதல் தடவையாக ஒரு குழுத் தொகுதி கிடைத்தது.
வட்ட நிலவைக் கட்டி இழுத்து வந்ததைப் போன்ற களிப்பில் திளைத்தது அக்கட்சி. முன்னைய மதியுரை அமைச்சர் திரு லீ குவான் இயூ, சுமார் 52 ஆண்டுகளுக்குப் பின்னர் அமைச்சரவையில் இல்லாமல் கலந்துகொண்ட முதல் தேசிய தின நிகழ்வுகள் இடம்பெற்றதும் 2011ல்தான்.
முன்னணித் தலைவர்களான கோ சோக் டோங், வோங் கான் செங், எஸ் ஜயகுமார் ஆகியோர் அமைச்சரவையில் தங்கள் பொறுப்புகளை கைவிட்டனர். பின்னர் வந்த அதிபர் தேர்தலில் நான்கு முனைப் போட்டி ஏற்பட்டதும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் வியப்பின் வரிசையில் வந்தமர்ந்த அம்சங்கள். நியமன நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு இதுவரை இல்லாத அளவுக்கு 50 பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள்.
தொலைக்காட்சி நடிகை உள்பட பல்வேறு துறைகளைச் சார்ந்த தனிப்பட்டவர்கள் நாடாளுமன்றத்தில் மாற்றுக்குரல் எழுப்ப முன்வந்துள்ளது அதிக விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதைக் காட்டுகிறது. தேர்தல் வெற்றி இனி சுலபமாகக் கிட்டாது என்பது உணர்த்தப்பட்டிருக்கிறது.
பிரதமரும் மசெக தலைமைச் செய லாளருமான திரு லீ சியன் லூங்கும் இதைத்தான் அண்மை யில் சொல்லியிருக்கிறார். அரசியல் விழிப்புணர்வு வளர்ந்ததன் விளைவாக, இனி, வலியின்றி வெற்றி பிறக்காது. கிழக்குகூட வலியால் சிவந்துதான் சூரியனைப் பிரசவிக்கிறது.
எனவே கட்சியின் எல்லா வேட்பாளர்களும் இனி இன்னும் கடினமாக உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அரசாங்கமும் இப்போது விழித்துக்கொண்டுள்ளது.
மக்களின் குரலுக்கு அதிகம் செவிமடுக்கத் தொடங்கியிருக் கிறது. மக்கள் நலப் பணிகள் புதிய கோணத்திலும் புதுவேகத்திலும் நடைபெறத் தொடங்கியிருக்கின்றன.
பொது வீடமைப்புக் கொள்கையில் ஆகஸ்ட் மாதம் பெரும் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. வீடு வாங்க விரும்பும் சிங்கப்பூரர்களின் மாத வருமான உச்சவரம்பு 17 ஆண்டு களுக்குப் பின் உயர்த்தப்பட்டது.
கட்டட வரைவுப் படங்கள் தயாரானதுமே ஏலக்குத்தகை விண்ணப்பம் கோரப்படுவது இன்னொரு மாற்றம். 2011 ஆண்டில் மட்டும் 25,200 வீடுகள் கட்டுவதற்கான திட்டங்கள் விரைந்து தொடங்கப்பட்டன. இந்தப் புதிய ஆண்டிலும் 25,000 வீடுகள் கட்டப்படவுள்ளன.
பொதுப் போக்குவரத்திலும் பல மாற்றங்கள் அவ்வப்போது அறிவிக்கப்படுகின்றன. பேருந்து, ரயில்களுக்கான காத்திருப்பு நேரத்தைக் குறைக்கப் பலவாறான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
செப்டம்பரில், கல்விக் கொள்கையில் முக்கிய மாற்றம் அறிவிக்கப்பட்டது. புதிதாக, நற்குடிமகன் மற்றும் குடியுரிமைக் கல்வித் திட்டத்தை புதிய கல்வி அமைச்சர் ஹெங் சுவீ கியட் அறிவித்தார்.
சக மாணவர்களோடு போட்டியிட்டு நல்ல மதிப்பெண்களை எடுப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல்-உலக நடப்பிற்கேற்ப நன்னெறி கொண்டு பிறர்நலனில் அக்கறை கொள்ளும் சுய விழிப்புணர்வை கடைபிடிக்க இப்புதிய கல்விப் பாடத்திட்டம் வழிசெய்கிறது.
பூவை தழுவிச் செல்லும் தென்றலில் மணம் இருக்கும். பொதுமக்களோடு கலந்துருவாகும் அரசாங்கத் திட்டங்களில் புதுப்பொலிவு இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் வரவேற்போம் 2012 புதிய ஆண்டை. “இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால் தான்கண் டனைத்திவ் வுலகு.”