ஜோகூரில் மேற்கொள்ளப்படவிருக்கும் இஸ்கந்தர் வளர்ச்சி வட்டாரத் திட்டத்தில் சிங்கப்பூர் நிறுவனங்கள் முதலீடுகள் செய்யவிருப்பது குறித்து பயப்படத் தேவையில்லை என்று மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக், அம்னோ தலைவர்களுக்கு நினைவுபடுத்தியுள்ளார்.
ஜோகூர் வளர்ச்சி வட்டாரத்தில் சிங்கப்பூர் முதலீடுகளை ஈர்க்க தான் மேற்கொண்டு வரும் முயற்சிகளை கெடுக்க வேண்டாம் என்றும் திரு நஜிப், கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜோகூரில் அம்னோ கிளை ஆண்டுக் கூட்டத்தை நேற்று அவர் தொடங்கி வைத்துப் பேசினார்.
இஸ்கந்தர் வளர்ச்சி வட்டாரம், அங்கு செய்யப்பட்டவிருக்கும் எல்லா முதலீடுகளால் சிங்கப்பூர், மலேசியா ஆகிய இரு நாடுகளும் நன்மை அடைவதை உறுதிப்படுத்திக்கொள்ளும் என்றும் திரு நஜிப் கூறினார்.
திரு நஜிப், சென்ற ஆண்டு மலேசியப் பிரதமராக பதவி ஏற்றது முதல் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை மூன்று தடவை சந்தித்துப் பேசியிருக்கிறார்.
இரு நாடுகளும் எதிர்நோக்கும் இருதரப்பு பிரச்சினைகளில் முக்கிய பிரச்சினை ஒன்று இந்தப் பேச்சுவார்த்தைகளால் தீர்வு காணப்பட்டுள்ளது. கேடிஎம் தஞ்சோங் பகார் ரயில் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற மலேசியா இணங்கியிருப்பதன் மூலம் முக்கிய பிரச்சினை ஒன்றுக்கு தீர்வு கிடைத்துள்ளது.
திரு அப்துல்லா படாவி பிரதமராக இருந்தபோது ரத்து செய்யப்பட்ட வளைவு பாலத் திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று ஜோகூர் மாநிலத் தலைவர்கள் திரு நஜிப்பை நெருக்கி வருகின்றனர். அத்திட்டம் மீண்டும் தொடங்கப்படுவதற்கு மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மதுவும் ஜோகூர் முதலமைச்சரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஜோகூர் பாலத்திற்குப் பதிலாக புதிய பாலத்தை கட்டுவது குறித்து சிங்கப்பூருடன் கலந்து பேசவிருப்பதாக ஜோகூர் முதலமைச்சர் அப்துல் கனி உதுமான் கூறியுள்ளார். ஆனால் அந்தப் பாலத் திட்டத்தை மீண்டும் தொடங்குவதற்கு சிங்கப்பூர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளது.
இந்நிலையில் ஜோகூர் இஸ்கந்தர் திட்டம் பற்றிப் பேசிய திரு நஜிப், சிங்கப்பூர் முதலீடுகளை மற்ற நாடுகளின் முதலீடுகளிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கக்கூடாது என்று கூறினார்.
அதனால் நமது நாடு நன்மை அடையும் என்றால் அதிகமாக சிங்கப்பூர் முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் நாம் நன்மை அடைவோம் என்று திரு நஜிப் கூறினார்.