ஜப்பானில் பட்டினியால் இறந்த தாய், தந்தை, மகன்

Wednesday, February 22nd, 2012
tm logo
ஜப்பானில் தோக்கியோ அருகே உள்ள ஒரு நகரில் ஒரு வீட்டில் மூன்று பேர் இறந்து கிடந்ததை போலிசார் கண்டனர்.  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் ஆகிய மூவரும் இறந்து கிடந்ததாகவும் அவர்கள் இறந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகியிருக்கலாம் என்றும் போலிஸ் வட்டாரங்கள் கூறின.
 அவர்கள் பட்டினியால் இறந்ததாக தெரியவந்துள்ளது என்று போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். அந்தப் பெற்றோருக்கு 60 வயதிருக்கலாம் என்றும் மகனுக்கு 30 வயதிருக்கலாம் என்றும் அவர் சொன்னார்.
அவர்கள் தங்கியிருந்தது ஒரு வாடகை வீடு. அவர்கள் வீட்டு வாடகை ஆறு மாதங்களாக செலுத்தாமல் இருந்ததால் மின்சாரம், எரிவாயு விநியோகம் துண்டிக்கப்பட்டிருந்தன. தண்ணீரை மட்டுமே குடித்து அந்தக் குடும்பத்தினர் உயிர்வாழ்ந்திருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. அந்த வீட்டில் சில்லறைக் காசுகள் மட்டும் காணப்பட்டதாக போலிசார் கூறினர்.
அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல்கள் அழுகிப் போயிருந்ததாகவும் போலிசார் கூறினர்.