இந்தியர்களில் 15% நீரிழிவு நோயாளிகள்

Tuesday, November 16th, 2010

சிங்கப்பூரில் மரணத்தை விளை விக்கும் 7வது நோயான நீரிழிவு இந்தியர்களிடையே 15 விழுக்காடு காணப்படுகிறது.

இதற்கடுத்த நிலையில் மலாய்க்காரர்கள் மத்தியில் 11 விழுக்காட்டினருக்கும் சீனர்களிடையே 7 விழுக்காட்டி னருக்கும் நீரிழிவு நோய் உள்ளது.
உலக நீரிழிவு நோய் தினத்தில் கலந்து கொண்டு பேசிய கல்வி உள்துறை துணை அமைச்சர் மசகோஸ் ஜுல்கிஃபிலி இதனைத் தெரிவித்தார்.
18க்கும் 69க்கும் இடைப்பட்ட வயதினரிடையே 12 பேரில் ஒருவருக்கும் இந்த நோயின் பாதிப்பு உள்ளது.
1975 ஆம் ஆண்டில் சிங்கப்பூரரிடையே 2 விழுக்காடாக இருந்த நீரிழிவு நோய் 2004 ஆம் ஆண்டில் 8.2 விழுக்காட்டுக்கு உயர்ந்தது.
 இந்த நோயைக் கட்டுக்குள் வைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். விழிப்புணர்வும் கல்வியும் இதற்கு உதவி செய்ய முடியும்.
நீரிழிவு நோயைக் கவனிக்காமல் விட்டால் கண்பார்வை இழப்பு, நரம்புப் பாதிப்பு, சிறுநீரகக் கோளாறு, இதயப் பிரச்சினை மற்றும் கை கால் எடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்றார் அமைச்சர்.
நோய் வரும் முன்னரே உரிய நேரத்தில் பரிசோதித்துக் கொள்வதும், ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை மேற்கொள் வதும்  நீரிழிவு நோய் அபாயத்தைத் தடுக்கும் வழிகள்.
பருமனான உடலமைப்பு கொண்டோரும், நீரிழிவு நோயாளிகளின் வாரிசுகளும் நோய்  தாக்கும் முன்னரே உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
கருவுற்ற பெண்களும் இதற்கான உடல் பரிசோதனை செய்து கெள்வது நல்லது.
நோய் கண்டறியப்பட்டால் தவறாமல் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
தற்போது நடப்பில் உள்ள உடல் பரிசோதனைத் திட்டத் தை பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்வதன் வழி நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பைப் புற்றுநோய் ஆகியவற்றின் அறிகுறி உள்ளதா எனத் தெரிந்து கொள்ள வேண்டும்.
விரைவில் இந்த சோதனைத் திட்டம் இலவசமாகக் கிடைக்கும் என்றார் அவர்.