கேரளாவில் தமிழர்களுக்கு எதிரான வன்முறை; பாதியிலேயே முடிகிறது பக்திப் பயணம்
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை கேரளா, தமிழ் நாடு ஆகிய இரு மாநிலங்களிடையே மிகப்பெரிய அரசியல் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்தப் பிரச்னையால் அரசியல்வாதிகளை விட அப்பாவி மக்களும் ஆன்மீகப் பயணம் மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்களுமே அதிகம் பாதிக்கப் பட்டுள்ளனர். ஐயப்பனை தரிசிக்க செல்லும் நேரத்தில் இப்படி இடையூறு ஏற்பட்டதால் பக்தர்கள் பலரும் பெரும் வேதனைக்குள்ளாகி உள்ளனர். இதனால் ஐயப்பனை தரிசிக்க முடியாதே என்று சுருளி அருவியில் குளித்து விட்டு அங்கேயே ஐயப்பன் போட்டோவை வைத்து மாலையை கழற்றி விரதத்தை முடித்து விட்டு வீடு திரும்புகின்றனர் பக்தர்கள்.
கேரள மாநில எல்லையில் தமிழர்களும் ஐயப்ப பக்தர்களும் தமிழகத்தில் இருந்து செல்லும் வாகனங்களும் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றன. அதனால் கேரள எல்லையில் உள்ள தமிழ் நாட்டைச் சேர்ந்த குமுளியில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.



