ஒவ்வொரு மாணவருக்கும் ‘டேப்லட்’ கணினி. பாடங்களைக் கணினியிலேயே பதிவேற்றி ஆசிரியர்களிடம் மாணவர்கள் சமர்ப்பிக்கின்றனர்.
எதிர்காலப் பள்ளித் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள முதல் பள்ளியான பீக்கன் தொடக்கநிலைப் பள்ளி, தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டு மேம்படுத்தப்பட்ட கற்றல் முறைகளைக் கையாளுகிறது.
சிங்கப்பூரின் எதிர்காலப்பள்ளிகள் திட்டத்தில் உருவான முதல் தொடக்கநிலைப் பள்ளி இது.
“21ம் நூற்றாண்டின் சவால்களைச் சந்திக்கும் தன்னம்பிக்கையும் கற்றலுக்கான ஆசையும் பீக்கன் தொடக்கப் பள்ளியின் இறுதியில் மாணவர்களிடத்தில் காணலாம்,’’ என்றார் பீக்கன் தொடக்கப் பள்ளியின் துணைத் தலைமை ஆசிரியர் திரு சூராஜ் நாயர்.
மாணவர்களின் உருவாக்கும் திறனை வெளிப்படுத்த ‘பீக்கன்வோர்ல்’ என்ற ‘3டி’ கற்றல் சூழலைத் தொடக்கநிலை மாணவர்களுக்காக வடிவமைத்துள்ளது இப்பள்ளி.
எந்த நேரத்திலும் எங்கும் இக்கற்றல் சூழலின் பயன்பாடுகளை மாணவர்கள் இணையத்தின் வழி பயன்படுத்தலாம்.
2008 ஜனவரியிலிருந்து இயங்கி வரும் இப்பள்ளியில் தொடக்கநிலை ஒன்றிலிருந்து மூன்று வரை 720 மாணவர்கள் உள்ளனர்.
தாய் மொழிக் கல்விக்கும் வகுப்பறைகளில் உள்ள கணினி பயன்படுகிறது. ஒன்றாம் வகுப்பிலிருந்தே மாணவர்கள் கணினி மயம் மாணவர்களின் அன்றாடப் பாடத் திட்டத்தில் கலக்கப்படுகிறது என்றார் அப்பள்ளியின் தமிழாசிரியர் திருமதி சிவ கௌரி கலியமூர்த்தி(39).
புக்கிட் பாஞ்சாங்கில் உள்ள இப்பள்ளியின் அதிகார திறப்பு விழாவில் நேற்று இடைக்கால தகவல் தொடர்பு கலைகள் அமைச்சர் ரியர் அட்மிரல் லுயி டக் இயூ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அப்பள்ளியின் ‘3டி உலகத்தைத்’ திறந்து வைத்தார்.