பயங்கரவாதத் தாக்குதல் திட்டங்கள் போன்ற உள்நாட்டு பாதுகாப்பு மிரட்டல்களை அடையாளம் காண்பதற்காக உருவாக்கப்பட்ட அதிநவீன பாதுகாப்பு அபாய எச்சரிக்கைத் திட்டங்கள், கல்வி, எரிசக்தி பாதுகாப்பு, இணையத் தாக்குதல் போன்றவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளன.
கடந்த 2004ம் ஆண்டில் தொடங்கப்பட்ட அபாயத்தை அளவிடும் ‘Rahs’ எனப்படும் திட்டத்தை, அரசாங்கத் துணை நிறுவனமான பாதுகாப்பு மிரட்டலை எதிர்கொள்ளும் நிலையம் போன்ற பாதுகாப்பு முகவைகள் முதலில் பயன்படுத்தின.
தற்போது எரிசக்தி சந்தை ஆணையம் போன்ற ஏனைய முகவைகளும் இத்திட்டத்தைப் பயன்படுத்துவதாக மூத்த அமைச்சரும் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான பேராசிரியர் எஸ்.ஜயகுமார் கூறினார்.
சிங்கப்பூரின் எரிசக்தி சந்தையை முறைப்படுத்தும் எரிசக்தி சந்தை ஆணையம், தனது நடைமுறைத் திட்டங்களைப் பல்வேறு தேசிய, உலகளாவிய நிகழ்வுடன் ஒப்பிட்ட இத்திட்டத்தை 2006ல் பயன்படுத்தத் தொடங்கியது. திடீர் எண்ணெய் விலை மாற்றங்களை நிகழ்வுகளைச் சிறப்பாகக் கையாள முடியுமா என ஆராய ஆணையம் இத்திட்டத்தைப் பயன்படுத்தத் தொடங்கியது.
இத்திட்டம் தற்போது மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் மூத்த அமைச்சர் குறிப்பிட்டார்.