கள்ளச்சிகரெட்டுகள் நிறைந்த 1000 அட்டைப்பெட்டிகளைச் சிங்கப்பூருக்குள் கடத்திவர முயன்ற இந்தோனீசிய ஆடவர்கள் இருவர் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.
29 மற்றும், 35 வயதாகும் அவ்விரு ஆடவர்களும் “சம்பான்” படகில் சிங்கப்பூருக்குள் நுழைய முயன்றனர். ஆனால், மூன்று மீன் பண்ணைகளின் உரிமையாளர்கள் அவர்களைப் பார்த்துவிட்டனர். உரிமையாளர்கள் மூவரும் ஆடவர்களைப் பின்தொடரவே, அவர்கள் பூலாவ் புலொ தீவில் படகைக் கைவிட்டுவிட்டு, காட்டுப்பகுதிக்குள் தப்பிச் சென்றனர்.
தகவல் கிடைத்த போலிசார், தேடல் நடவடிக்கையைத் தொடங்கினர்.
லிம் சூ காங் லேன் 9க்கு அப்பாலுள்ள காட்டுப்பகுதியில் சந்தேகப்பேர்வழிகள் ஒளிந்திருப்பதைப் போலிசார் கண்டுபிடித்தனர். அவர்களது படகையும் போலிசார் தேடிப்பிடித்தனர். படகில் 20 பைகள் நிறைய கள்ளச் சிகரெட்டுகள் இருந்தன.
சிங்கப்பூருக்குள் கள்ளத்தனமாக நுழைந்ததாக இருவர் மீதும் சனிக்கிழமை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. இருவருக்கும் குறைந்தது ஆறு மாதச் சிறைத் தண்டனையும் பிரம்படியும் தண்டனையாக விதிக்கப்படலாம்.