-தமிழவேல்-
புதுப்பிக்கப்பட்ட தேக்கா சந்தையில் வெப்பம் தாங்க முடியவில்லை என்பது அங்குள்ள பல கடைக்காரர்களின் புலம்பல்.
போதுமான காற்றாடிகள் இல்லை. போதுமான சூடு இழுக்கும் இயந்திரங்கள் இல்லை என்றார் மாயா மோகன் பானக் கடையில் பணி புரியும் திரு முகமது ஃபாயிஸ்(28).
கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் நீடித்த புதுப்பிப்புப் பணிகளுக்குப் பிறகு தேக்கா சந்தை மீண்டும் திறக்கப்பட்டது.
“தேக்கா சந்தையின் முதல் மாடி உணவுக் கடைப் பகுதியில் வலது பக்கம் உள்ள கடை வரிசை அதிக வெப்பம் நிறைந்த இடமாக இருக்கிறது,’’ என்றார் திரு ஃபாயிஸ்.
நேற்று ஏற்பட்ட மின்தடை ஒரு வாரத்தில் ஏற்பட்ட இரண்டாவது மின் தடையாகும்.
வெப்பமும் மின்தடையும் ஒரு பக்கம் இருக்க மற்றொரு பிரச்சினை பற்றியும் பிஸ்மி இறைச்சி கடை உரிமையாளார் திரு உசேன் பாய் (35) விளக்கினார்.
“முன்பு எலித் தொல்லை இருக்கும். கரப்பான்பூச்சிகளைப் பார்க்கமுடியாது இப்போது எலித் தொல்லை இல்லை, கரப்பான்பூச்சிகள் தொல்லை கூடிவிட்டது,’’ என்றார் அவர்.
பொதுவாக தேக்கா சந்தை இன்னும் பிரகாசமாகவும் சுத்தமாகவும் இருக்கிறது. சிறு சிறு பிரச்சினைகளையும் களைந்துவிட்டால் கடைக்காரர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் வசதியாக இருக்கும் என்பது பல கடைக்காரர்களில் கருத்து.