டாக்கா
பங்ளாதேஷில் உள்ள ஆயிரக்கணக்கான பர்மிய அகதிகளும் பட்டினிக் கொடுமையை எதிர்நோக்கு வதாக அமெரிக்க மருத்துவ அறப்பணி அமைப்பு எச்சரித்திருக்கிறது.
முஸ்லிம் சிறுபான்மையினரான “ரொஹிங்கா” அகதிகளுக்குத் தகுந்த பராமரிப்பு கிடைப்பதை அரசாங்கம் தடுப்பதாக மனித உரிமைக்கான மருத்துவர்கள் அமைப்பு கூறுகிறது.
பர்மிய அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கை களிலிருந்து தப்பிவந்த ரொஹிங்கா அகதிகளுக்கு உதவும் முயற்சிகளுக்கு, பங்ளாதேஷ் அரசாங்கம் முட்டுக்கட்டைகள்
போடுவதாக அமைப்பு
குற்றம் சாட்டுகிறது.
சென்ற மாதம் MSF எனும் அனைத்துலக மனிதாபிமான மருத்துவ உதவி அமைப்பு வெளியிட்ட இதே போன்ற அறிக்கையை மறுத்ததைப் போல, இந்தக் குற்றச் சாட்டையும் பங்ளாதேஷ் அரசாங்கம் மறுத்துவிட்டது.
அகதிகளுக்கு உதவி
அனுப்ப அனுமதிக்கா
விட்டால், பிள்ளைகள் பட்டினியால் வாடுவார்கள் என்று மனித உரிமைக்கான மருத்துவர்கள் அமைப்பின் அறிக்கை கூறுகிறது.
அண்டை நாடான பர்மா இவ்வாண்டு பிற்பகுதியில் தேர்தல் நடத்த ஆயத்தமாகி வரும் வேளையில், பங்ளாதேஷ் அரசாங்கம் பர்மிய அகதிகளை “தன் விருப்பப்படி கைது செய்கிறது, சட்டவிரோதமாக வெளியேற்றுகிறது, கட்டாயப்படுத்தி அடக்கி வைத்திருக்கிறது” என்று கூறப்படுகிறது.
பதிவு செய்யப்படாத அகதிகள் வாழும் முகாம்கள் “கூரையில்லாத திறந்தவெளி சிறைகளைப் போல” இருப்பதாக அறிக்கை வர்ணிக்கிறது. இந்த முகாம்களில் சுமார் 200,000 ரொஹிங்கா அகதிகள் வாழ்வதாக நம்பப்படுகிறது.
“பங்ளாதேஷ் அரசாங்கம் இவர்களின் நிலையை முழுமையாகப் புறக்கணிக்கிறது” என்று அமைப்பின் ஆய்வு, விசாரணைப் பிரிவின் இயக்குநர் ரிச்சர்ட் சொலம் கூறினார்.
ஆனால், அமைப்பின் அறிக்கை “முற்றிலும் பொய்யானது” என்று பங்ளாதேஷின் ஐநா பிரதிநிதி அப்துல் மொமன் கூறினார்.
“அகதிகளுக்குச் செல்லும் உதவி பயங்கரவாத அமைப்புகளிடமிருந்து வரவில்லை என்பதை அரசாங்க அதிகாரிகள் உறுதிப்படுத்தவேண்டும்” என்றார் அவர்.
“பாதிக்கப்பட்டவர்கள் நாங்களும்தான். பர்மிய மக்கள் அவர்களது நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். நாங்கள் அவர்களுக்கு அடைக்கலம் தந்தோம்.
“இதுவும் ஏழ்மையான நாடுதான். இருந்தாலும், எங்களால் முடிந்தவரை அவர்களுக்கு உதவ முயற்சி செய்கிறோம்” என்றார் அவர்.
“எப்போதாவது நிகழ்ந்த” ஔரிரு சம்பவங்கள் தவிர்த்து, அகதிகள் பரவலாக வதைக்கப்படவில்லை என்று அவர் மறுத்துக் கூறினார்.
- பிபிசி