அங் மோ கியோ பேருந்துப் பணிமனையில் (டெப்போ) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆறு ஈரடுக்குப் பேருந்துகள் அடையாளம் தெரியாத அளவுக்கு தீயில் கருகிப் பொசுங்கின.
நேற்று அதிகாலை 3.30 மணிக்கு தீச்சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் கிடைத்தது. மூன்று நிமிடங்களில் இரு தீயணைப்பு வாகனங்கள், ஒரு ரெட் ரைனோ, ஒரு ஆதரவு வாகனம் மற்றும் 20 படையினர் அங்கு சென்று சேர்ந்தனர்.
அங்கு திறந்த வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மாடி பேருந்துகளில் தீப் பற்றி எரிவதை அவர்கள் பார்த்தனர். உடனே பணியில் இறங்கிய அவர்கள் சுமார் 30 நிமிடங்களில் தீயைக் கட்டுப்படுத்தினர்.
இச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. தீச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
ஆறு பேருந்துகள் தீயில் கருகியதால் பேருந்து சேவையில் பாதிப்பு ஏற்படலாம் என எஸ்பிஎஸ் பேச்சாளார் கூறினார். எனினும் பயணிகளின் சிரமத்தை முடிந்த வரை குறைக்க நிறுவனம் முயற்சி செய்யும் எனவும் கூறப்பட்டது.
ஆறு பேருந்துகளின் மொத்த மதிப்பு ஏறக்குறைய
$3 மில்லியன். ஒரு புதிய மாடி பேருந்தின் விலை $500,000.