வம்புக்கு இழுக்கப்பட்ட ஜப்பானிய இளவரசி
Sun, 07/03/2010தோக்கியோபள்ளியில் மாணவர்கள் சிலர் தன்னை வம்புக்கு இழுத்ததாகப் புகார் செய்த ஜப்பானிய இளவரசி அய்கோ, சென்ற வாரத் தொடக்கத்திலிருந்து பள்ளிக்குச் செல்லவில்லை என்று அரசக் குடும்ப அதிகாரி தெரிவித்திருக்கிறார். எட்டு வயதாகும் இளவரசி, பள்ளியிலிருந்து கவலையுடன் வீடு திரும்பியதாகவும், வயிறு வலிப்பதாகக் கூறியதாகவும் அவர் தெரிவித்தார். இளவரசியும் அவளது வகுப்பிலிருந்த மற்ற சில மாணவர்களும் மற்றொரு வகுப்பிலுள்ள சில சிறுவர்களால் “கடுமையாக நடத்தப்பட்டதாக” அவர் கூறினார். பட்டத்து இளவரசர் நருஹிட்டோ, இளவரசி மசாகோ ஆகியோரின் மகளான அய்கோ, தோக்கியோவிலுள்ள ககுஷுன் தொடக்கப்பள்ளியில் படிக்கிறார். ஜப்பானியப் பேரரசரின் பேத்தியான அய்கோ, எப்போது மீண்டும் பள்ளிக்குச் செல்வார் என்ற விவரங்களை அதிகாரி தெரிவிக்கவில்லை. சென்ற செவ்வாய்க்கிழமை பள்ளிநேரம் முடிவதற்குமுன்பே வீடு திரும்பிய அய்கோ, அதற்குப்பின் பள்ளிக்குத் திரும்பிச் செல்லவில்லை. இவ்விவகாரத்திற்குத் தீர்வு காணுமாறு பள்ளியிடம் அரச குடும்பம் கேட்டுக் கொண்டுள்ளது. அதோடு இளவரசியின் பிரச்னை பற்றி செய்தி வெளியிடவும் அரச குடும்பம் பள்ளிக்கு அனுமதி அளித்ததாக கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்தது.