fontsize: 60% 70% 80% 90%

சிங்கப்பூர்

உற்பத்தித்திறன் உயர்வை தலைமை நிர்வாகிகளே வழிநடத்த வேண்டும்: பிரதமர் லீ

உற்பத்தித்திறன் உயர்வை வழிநடத்திச் செல்லுமாறு தலைமை நிர்வாகிகளுக்கும் உச்சத் தொழிலதிபர்களுக்கும் பிரதமர் லீ சியன் லூங் சவால் விட்டிருக்கிறார்.

உற்பத்தித்திறனை உயர்த்துவதில் இவர்களுக்குப் பெரும்பங்கு இருப்பதாக அவர் கூறினார்.

துரித மாற்றம் காணும் பொருளியல், தொழில் சூழலில் உடனுக்குடன் செயல்படக்கூடிய வகையில் நீக்குப் போக்கான நடைமுறைகளையும் மனப்போக்கையும் அவர்கள் ஏற்கவேண்டும்.

இவ்வாண்டு அமலாகும் 1% மத்திய சேமநிதி சந்தா விகித உயர்வு, சம்பள ஏற்பாடுகளில் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் திரு லீ கூறினார்.

இவ்வாண்டின் சம்பள உயர்வை அடிப்படை சம்பளம், மாதாந்தர மாறுவிகிதத் தொகை, வருடாந்தர மாறுவிகிதத் தொகை ஆகியவற்றுகு இடையில் பிரித்தளிக்கவேண்டும் என்றும் அவர் சொன்னார்.

நெருக்குதலான தொழிலாளர் சந்தையில், சம்பள ஏற்பாடுகளிலும் முதலாளிகள் விவேகமாக இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

திறன் மேம்பாட்டையும் புத்தாக்கத்தையும் ஊக்குவித்தும், பணி நடைமுறைகளில் செயல்திறனைக் கட்டிக் காத்தும், உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் புதிய சந்தைகளைத் தேடியும் முதலாளிகள் உற்பத்தித்திறனை ஊக்குவிக்கலாம் என்றார் திரு லீ.

இவ்வாறு செய்வதால், நல்ல ஆதாயம் கிட்டி, போட்டித்திறன் மேம்பட்டு, ஊழியர் களுக்கும் சமூகத்திற்கும் தத்தம் பொறுப்பு களையும் முதலாளிகள் பங்காற்ற முடியும் என்று, சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனத்தின் 30வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்ட உச்சநிலை மாநாட்டில் பிரதமர் லீ கூறினார்.

“உங்கள் நிறுவனங்களின் உற்பத்தித்திறன் மேம்பாட்டில் உங்கள் தலைமைத்துவம் முக்கியம்” என்று சுமார் 900 தலைமை நிர்வாகிகள், மூத்த மேலாளர்கள் ஆகியோரிடம் திரு லீ சொன்னார். இரண்டு நாள் உச்சநிலை மாநாடு புதன்கிழமை காலை ரிசோர்ட்ஸ் வோர்ல்டு செந்தோசாவில் தொடங்கியது.

பிற்பாடு நடந்த கலந்துரையாடலின்போது, வெளிநாட்டு ஊழியர்கள் உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்குப் பங்களிக்காத குறைந்த திறன்பெற்றவர்களாக இல்லாதவரை, வெளிநாட்டு ஊழியர்களைத் தொழிற் சங்கம் எதிர்க்கவில்லை என்று தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் தலைவர் லிம் சுவீ சே முதலாளிகளுக்கு உறுதியளித்தார். கலந்துரையாடலில் மனிதவள அமைச்சர் கான் கிம் யோங், தேசிய முதலாளிகள் சம்மேளனத்தின் தலைவர் ஸ்டீவன் லீ ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மரம் வீழ்ந்து கார் சேதம்

அப்பர் ஈஸ்ட் கோஸ்ட் ரோடு-பிடோக் சவுத் அவென்யு 1 சந்திப்பில் கார் ஒன்றின் முன்பக்கக் கண்ணாடி மீது மரம் விழுந்தது.
ஆனால் காரின் உள்ளே உட்கார்ந் திருந்த ஔட்டுநருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

நேற்று புதன்கிழமை காலை 8.30 மணிக்கு அப்பர் ஈஸ்ட் கோஸ்ட் ரோடு-பிடோக் சவுத் அவென்யு 1 சாலைப் போக்குவரத்து சந்திப்பில் வாகனத்தை ஔட்டுவதற்கான அறிகுறியான பச்சை விளக்குக்காக வாகன ஔட்டி ஒருவர் காத்திருந்தார்.
அப்பொழுது அவரது காரின் முன்பக்கக் கண்ணாடி மீது மரம் ஒன்று விழுந்தது.

இது கடந்த இரண்டு வாரங்களில் நிகழ்ந்துள்ள மூன்றாவது சம்பவம் இது.

முதல் சம்பவத்தில் இம்மாதம் 20ம் தேதி இயோ சூ காங் ரோடில் திரு சுவா லூங் வாய் என்பவரின் கார் மீது மரம் விழுந்ததால் அவர் உயிரிழந்தார்.

இதே போன்று இரண்டு நாட்கள் கழித்து அங் மோ கியோவில் நிகழ்ந்த சம்பவத்தில் மூவருக்கு காயம் ஏற்பட்டது.

முன்னாள் வங்கி அதிகாரிக்கு $10,000 அபராதம்

சிங்கப்பூரிலுள்ள யுபிஎஸ் வங்கியில் தகவல் தொழில்நுட்ப வல்லுநராக வேலை செய்து கொண்டிருந்தபோதே, தனியார் முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்ய நண்பர்களிடமிருந்து நிதி திரட்டினார் மார்க் ஆன்ட்ரூ ராபர்ட்சன்.
ஆனால், அவர் திட்டமிட்டபடி முதலீட்டுத் திட்டம் நிறைவேறவில்லை.

அதனால், கணினி துஷ்பிரயோகச் சட்டத்தின்கீழ் போலி பத்திரம் தயாரித்ததற்காக ராபர்ட்சனுக்கு $8,000 அபராதம் விதிக்கப்பட்டது.

நம்பிக்கை மோசடி குற்றத்திற்காக அவருக்கு மேலும் $2,000 அபராதம் விதிக்கப்பட்டது.

பிரிட்டனைச் சேர்ந்த சிங்கப்பூர் நிரந்தரவாசியான 41 வயது ராபர்ட்சன், யுபிஎஸ் வங்கியின் தகவல் தொழில்நுட்ப அடிப்படை வசதிகள் பிரிவின் இணை இயக்குநராகப் பதவி வகித்தபோது, பெர்டோமோ சிகார்ஸ் ஏஷியா நிறுவனத்திற்காக முதலீடுகள் திரட்டினார்.

இந்நிறுவனம் பேங்காக்கில் ஆடவர் மன்றம் நடத்துகிறது.

நிறுவனத்தில் ஆறு மாதகாலம் முதலீடு செய்வோருக்கு 15 விழுக்காடு வட்டி தருவதாக நிறுவனம் உறுதியளித்தது.

தனது இந்தோனீசிய மனைவியின் இரு நண்பர்களிடம் முதலீட்டுத் திட்டத்திற்கு நிதி திரட்டினார் ராபர்ட்சன். குமாரி சுகந்தி கண்ணாயிரம் $200,000 தொகையும், குமாரி ரத்னா கில்லிலாண்ட் $80,000 தொகையும் தந்தனர். இந்த முதலீட்டை யுபிஎஸ் வங்கி ஆதரிப்பதாகவும் குமாரி கில்லிலாண்டிடம் ராபர்ட்சன் கூறினார்.

ஜூலை 2008ல், வங்கியின் பெயருடன் போலி வைப்புச் சான்றிதழைத் தயாரித்து குமாரி கில்லிலாண்ட்டிடம் கொடுத்தார் ராபர்ட்சன்.

முதலீட்டுக்கு பெர்டோமோ தரும் 15 விழுக்காடு வட்டியில் மூன்று விழுக்காட்டைத் தான் வைத்துக் கொண்டு, முதலீடு செய்த பெண்களுக்கு 12 விழுக்காடு வட்டி தருவது ராபர்ட்சனின் திட்டம்.

ஆனால், இதை அவர் தெரிவிக்காததால், ராபர்ட்சன் கையாடல் செய்ததாகச் சட்டப்படி கருதப்படுகிறது.

குமாரி கண்ணாயிரத்திடம் கொடுக்கவேண்டிய வட்டியில் $2,980 எடுத்துக்கொண்டதாக ராபர்ட்சன் ஒப்புக்கொண்டார்.

மேலும் $3,500 கையாடல் செய்த குற்றச்சாட்டுகளை மாவட்ட நீதிபதி சர்ஜித் சிங் தீர்ப்பளிக்கும்போது கவனத்தில் கொண்டார்.

சுமத்ரா கதையை விவரிக்கும் புத்தம் புதிய கண்காட்சி

இந்தோனீசியாவின் சுமத்ரா தீவின் கதையை விவரிக்கும் புத்தம் புதிய கண்காட்சி ஆசிய நாகரிக அரும்பொருளகத்தில் நடைபெறவிருக்கிறது.

“சுமத்ரா: பொற்தீவு” எனும் கண்காட்சி ஜூலை 30 முதல் நவம்பர்
7 வரை நடைபெறும்.

சுமத்ராவின் தனித்தன்மை வாய்ந்த கலாசார அடையாளத்தை எடுத்துக்காட்டும் 300க்கும் மேற்பட்ட காட்சிப்பொருட்கள் கண்காட்சியில் இடம்பெறும்.

ஆதிகாலத்திலிருந்து இன்றைய காலம்வரை, பல்வேறு கலாசார தாக்கங்களால் சுமத்ராவில் ஏற்பட்ட மாற்றங்கள் கண்காட்சியில் விவரிக்கப்படும்.

இடைக்காலத் தகவல், தொடர்பு, கலைகள் அமைச்சர் திரு லுய் டக் இயூ, வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்குக் கண்காட்சியைத் தொடங்கி வைப்பார்.

ஆசிய நாகரிக அரும்பொருளகம், இந்தோனீசியத் தேசிய அரும்பொருளகம், லெய்டனின் தேசிய இனவியல் அரும் பொருளகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்யும் இக்கண்காட்சி, சுமத்ரா கலாசாரத்தை எடுத்துக்காட்டும் முதல் அனைத்துலக நடமாடும் கண்காட்சியாகும்.

“பல்வேறு ஊடகங்களில் வெளிப்படும் அழகிய காட்சிப்பொருட்களுடன் சுமத்ராவின் வளமான கலாசார வரலாறு விவரிக்கப்படும்” என்று ஆசிய நாகரிக அரும்பொருளகத்தின் இயக்குநர் டாக்டர் அலன் ச்சொங் கூறினார்.

முதியவரின் மரணத்திற்கு காரணமானவருக்கு 30 மாத சிறை

இங் யாம் சோக் என்ற 78 வயது முதியவரைக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி முகத்தில் குத்தினார் யோங் ஹோங் பெங் என்ற 40 வயது ஆடவர்.

இதனால் யாம் பின்னோக்கி விழுந்ததால் அவரது தலை சாலை நடைபாதை விளிம்பில் மோதி அவரின் மண்டை ஔட்டில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் மாண்டார்.

இந்தச் சம்பவம் கேலாங் லொரோங் 14 மற்றும் டால்மா ரோடு சந்திப்பில் நிகழ்ந்தது.

நீதிமன்றத்தில் நேற்று யோங் முதியவரைத் தாம் கொலை செய்யும் நோக்கத்துடன் தாக்கவில்லை என்றும் தமது தோழி முதியவர் தம்மைத் தாக்கினார் என்று கூறியதால் முதியவரைக் குத்தியதாகக் கூறினார்.

நாடே திரண்ட பெரு நடை

சிங்கப்பூரின் ஆகப்பெரிய பெருநடை நிகழ்ச்சியில் பங்குபெற நாடெங்கிலும் நேற்று திரண்டுவந்த மக்களை வரவேற்கும் வண்ணம் தெளிந்த வானில் கதிரவன் ஒளிவீசினான்.

மொத்தம் 84,000 பங்கேற்பாளர்கள் 75 சமூக மன்றங்களிலும் திறந்தவெளித் திடல்களிலும் ஒன்றுகூடி, “ஒரே சமூகப் பெருநடையில்” இரண்டு முதல் மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்தனர்.

காலை எட்டு மணிக்கு, 17 அமைச்சர்கள், 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அடித்தளத் தலைவர்கள் ஆகியோர் பல்வேறு இடங்களிலிருந்து நடையைத் தொடங்கினர்.

ஈசூனில் இருக்கும் காத்திப் திடலில் ஆக அதிகமாக 7,000 பங்கேற்பாளர்கள் திரண்டிருந்தனர். பிரதமர் லீ சியன் லூங் அவர்களோடு சேர்ந்து நடையைத் தொடங்கினார்.

மூத்த அமைச்சர் கோ சோக் டோங் மரீன் கிரசன்டிலும், மூத்த அமைச்சர் எஸ்.ஜயகுமார் பிடோக் சமூக நிலையத்திலும் பெருநடையைத் தொடங்கினர்.

“பெருநடை நிகழ்ச்சி பெருமகிழ்ச்சி அளித்தது” என்று தொகுதி விளையாட்டு மன்றக் குழுமத் தலைவர் பேட்ரிக் டியோ கூறினார்.
குழுமத்தின் முனைப்பில், மக்கள் கழகமும் 84 தொகுதி விளையாட்டு மன்றங்களும் பெருநடைக்கு ஏற்பாடு செய்தன.
மக்கள் கழகத்தின் 50வது ஆண்டு நிறைவையும், அடுத்த மாதம் நடைபெறும் இளையர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை ஆதரிக்கும் வகையிலும் பெருநடை நடத்தப்பட்டது.

ஒரே நேரத்தில், ஆக அதிகமான இடங்களில் இருந்து தொடங்கப்பட்ட பெருநடையாக நேற்றைய நிகழ்ச்சி சாதனை படைத்தது.
நிகழ்ச்சிக்குத் திட்டமிட எட்டு மாதகாலம் எடுத்தது. மொத்தம் 10,000 தொண்டூழியர்கள் நிகழ்ச்சியை நடத்த உதவினர்.

பெருநடையைத் தொடங்குவதற்குமுன், பிரதமர் லீயும், அங் மோ கியோ குழுத்தொகுதி, இயோ சூ காங் தொகுதி ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், பங்கேற்பாளர் களுடன் சேர்ந்து இளையர் ஒலிம்பிக் போட்டியின் ஆனந்தக் கூச்சலைப் பாடினர்.

“முதல் இளையர் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதில் நாங்கள் மிகுந்த பெருமை அடைகிறோம். உலகையே சிங்கப்பூருக்கு வரவேற்று, போட்டியை மாபெரும் வெற்றியாக்க நாம் அனைவரும் பங்காற்றுவோம் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார் வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் இயோ.

இளையர் ஒலிம்பிக் போட்டி வரும் ஆகஸ்ட் 14 முதல் 26 வரை சிங்கப்பூரில் நடைபெறுகிறது.

புற்றுநோய் விழிப்புணர்வுக்காக மொட்டையடித்தனர்

சிறுவர்களைப் பாதிக்கும் புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வை வளர்ப்பதற்காக, ஆயிரத்துக்கும் மேலானோர் ஞாயிற்றுக்கிழமை தலைமுடியை மழித்தனர்.

சிறுவர் புற்றுநோய் அறநிறுவனத்தின் தலைவர் திரு ரவி சிவலிங்கம் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக மொட்டையடித்துக் கொண்டார். அதிபர் எஸ் ஆர் நாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.

வீவோ சிட்டியில் நேற்றுக் காலை10.00 மணியில் இருந்து இரவு 8.00 மணி வரை நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்ட, உள்துறை அமைச்சுகளின் மூத்த துணை அமைச்சர் இணைப் பேராசிரியர் ஹோ பெங் கீயும் பங்கேற்றார்.

புற்றுநோய்க்கு “கீமோதெரபி” பெறும்போது தலைமுடி உதிரும். இதைக் கருத்தில் கொண்டு, புற்றுநோயுள்ள சிறுவர்களுக்கு ஆதரவாக “நம்பிக்கைக்கு முடி” நிகழ்ச்சிக்கு எட்டாவது ஆண்டாக சிறுவர் புற்றுநோய் அறநிறுவனம் ஏற்பாடு செய்தது.

தலைமுடியை இழப்பதில் எந்தத் தவறும் இல்லை என்பதையும், நோய்க்கு எதிராகச் சிறுவர்கள் தனித்துப் போராடவில்லை என்பதையும் எடுத்துக்காட்டுவது இந்நிகழ்ச்சியின் நோக்கம்.

“புற்றுநோயுள்ள சிறுவர்கள், தாங்கள் முடியை இழந்தால் எப்படித் தோற்றமளிப்போம் என்பதை நன்கு தெரிந்து வைத்துள்ளனர். எனவே பலரும் இங்கு தானாக வந்து மொட்டை யடிப்பது, வலுவான செய்தியைப் பரப்பும்,” என்றார் திரு ரவி.
தலைமுடியை மழித்துக்கொள்ள, சுமார் 1,100 பேர் முன்னதாக இணையத்தில் பதிவு செய்திருந்தனர். அவர்களில் சுமார் ஐவரில் ஒருவர் பெண்.

இந்நிகழ்ச்சியின் மூலம் கிட்டத்தட்ட $750,000 நிதி திரட்ட கொண்டுள்ள இலக்கில் பாதியை அறநிறுவனம் எட்டியுள்ளது.

பாண்டான் நீர்த்தேக்கத்தில் நீர் விளையாட்டு

மேற்கு சிங்கப்பூரில் முடிவடைந்துள்ள முதல் திட்டம் மக்கள் அனுபவித்து மகிழும் வகையில் புதிய பொழுது போக்குகளுக்கான முக்கிய தளமாகவும் மற்றும் ஒரே கூரையின் கீழ் அமைந்த பலதரப்பட்ட நீர் விளையாட்டுகளுக்கான மைய இடமாகவும் அமைந்துள்ளது.

பாண்டான் நீர்த்தேக்கம் விரைவில் நீர் விளையாட்டு ஆர்வலர்களுக்கான முக்கிய மையமாக உருமாற உள்ளது.

தேசிய நீர் முகவையின் கீழ் செயல்படும் பொதுப் பயனீட்டுக் கழகத்தின் துடிப்பான, அழகான, தூய்மையான நீர்த் திட்டம், பாண்டான் நீர்த்தேக்கம் நீர் விளையாட்டு அரங்காக மாற்றம் காணும் விதத்தில், புதிய வசதிகளுடன், பலதரப்பட்ட நடவடிக்கைகளையும் நடத்தும் விதமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயர் ராஜா-வெஸ்ட் கோஸ்ட் அடித்தள அமைப்புகளும் பொதுப் பயனீட்டுக் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், கல்வி, வர்த்தகத் தொழில் அமைச்சுகளுக்கான மூத்த துணை அமைச்சரும் வெஸ்ட் கோஸ்ட் நாடாளுமன்ற குழுத்தொகுதி உறுப்பினருமான திரு எஸ். ஈஸ்வரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

ஆயர் ராஜா, வெஸ்ட் கோஸ்ட் குடும்ப விழாவில் துடிப்பான, அழகான, தூய்மையான நீர்த் திட்டத்துடனான பாண்டான் நீர்த்தேக்கம் திறந்து வைக்கப்பட்டது.

பாண்டான் நீர்த்தேக்கத்தில் அமைந்துள்ள நீர்த்திட்டம் ஆடை மாற்றும் அறை, ஓய்வு எடுக்கும் வசதிகளுடன் பலதரப்பட்ட வசதிகளுக்கான மையமாக விளங்குகிறது.

அத்துடன், தேசிய விளையாட்டுக் கழகத்தின் பாய்மரக் கப்பல் செலுத்துதல், படகு ஓட்டுதல், ரோவிங் போன்ற விளையாட்டு வசதிகளும் இருக்கும்.

மீன் பிடித்தல், வானொலி கட்டுப்பாடு மற்றும் மின்னியல் படகு ஓட்டுதல் போன்ற நடவடிக்கைகளும் மக்களை தண்ணீருடன் அணுக்கப் படுத்தும்விதமாக புதிய தளம் அமைத்துக் கொடுக்கும். கூடுதலாக, நீரூற்றுடன் அழகுபடுத்தப்பட்ட ஏரிகளும் நீர்த்தேக்கத்தின் அழகை மேலும் மெருகூட்டும். பொதுப் பயனீட்டுக் கழகத்தின் இயக்குநர் திரு டான் குவான் சென் கூறும்போது, பலதரப்பட்ட நீர் விளையாட்டுகளை ஒரே கூரையின் கீழ் மக்கள் அனுபவித்து மகிழ வைத்துள்ளது இந்தத் திட்டம் என்று கூறினார்.

சிகரெட் குப்பையைத் தடுக்க 6,000 குப்பைத் தொட்டிகள்

தேசிய சுற்றுப்புற முகவை தென் கிழக்கு சமூக மேம்பாட்டு அமைப்பின் ஆதரவுடன் “சிகரெட் துண்டு குப்பைகளை நிறுத்துங்கள்” என்ற திட்டத்தை தென் கிழக்கு வட்டாரத்தில் தொடங்கி வைத்தது.

இந்தத் திட்டம் 6,000 கையடக்கமான, எங்கும் எடுத்துச் செல்லக்கூடிய குப்பைத் தொட்டிகளை புகை பிடிப்பவர்களுக்கு வசதியாக வைத்துள்ளது.

இதனால் சிகரெட் பிடிப்பவர்கள் தாங்கள் பிடித்த சிகரெட் துண்டுகளை பொறுப்பான முறையில் தூக்கி வீச இந்தத் திட்டம் பெரும் துணைபுரிகிறது.

தேசிய சுற்றுப்புற முகவையின் புள்ளி விவரப்படி, கடந்த ஐந்து ஆண்டுகளாக 90 விழுக்காட்டினருக்கும் மேலானோர் சிகரெட் துண்டுகளை தரையில் வீசி எறிந்ததற்காகப் பிடிபட்டனர்.

கண்காணிப்பு மற்றும் புள்ளி விவரங்களின் அடிப்படையில், தென் கிழக்கு வட்டாரத்தில் சிகரெட் துண்டு குப்பை என்பது அடிக்கடி பரவலாக இடம்பெறுகின்ற ஒன்று என்று கண்டறியப்பட்டது.

பேருந்து நிறுத்துமிடங்கள், பேருந்து முனையங்கள், தேநீர்க் கடைகள், மக்கள் அதிக நடமாட்டமுள்ள பொது இடங்களில் இந்தப் பிரச்சினை அதிகம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. 2009ல் பிடிபட்ட மொத்த குப்பை போட்டவர்களில் 95 விழுக்காட்டினர், இந்த வட்டாரத்தில் சிகரெட் குப்பை போட்டவர்களே எனவும் தெரிய வந்துள்ளது.

ஆர்ச்சர்டு பிளாசா கொலை: 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது

ஆர்ச்சர்டு பிளாசா கொலை தொடர்பில் 7 மலாய் ஆடவர்களை போலிசார் கைது செய்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை நடந்த கும்பல் சண்டையில் மலாய் ஆடவர் ஒருவர் கொல்லப்பட்டார்.

திரு முஹம்மது நொராய்டி ஜஹாரி என்ற 28 வயது ஆடவர், ஆர்ச்சர்டு பிளாசாவின் தரை தளத்தில் ரத்த வெள்ளத்தில் தோய்ந்து கிடக்கக் காணப்பட்டார்.

வெட்டுக் காயங்களுடன், சுயநினைவிழந்து காணப்பட்ட ஆடவரை சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் போலிசார் அனுமதித்த சற்று நேரத்தில் ஆடவர் உயிர் பிரிந்தது.

17 முதல் 41 வயதுடைய சிங்கப்பூரர்களான மலாய் ஆடவர்கள், 27 மணி நேரத்துக்குள்ளாக சுவா சூ காங், புக்கிட் மேரா, செம்பவாங் மற்றும் மார்சிலிங் வட்டாரங்களில் பிடிக்கப்பட்டனர்.

இவர்களில் 7 பேர் மீது ஆடவர் கொலை தொடர்பில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த ஏழு பேர் கொண்ட கும்பல் பலமுறை அந்த ஆடவரை வெட்டியதாகவும், மாவட்ட நீதிமன்றத்தில் ஞாயிறன்று காலை குற்றம் சாட்டப்பட்டது.

இந்தக் குற்றம் நிரூபிக்கப் பட்டால் இந்த எழுவருக்கும் மரண தண்டனை விதிக்கப்படக் கூடும்.

மேலும் விசாரணையைத் தொடரும் வகையில், இந்த எழுவரையும் ஒருவார காலத்துக்கு விசாரணைக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு மீண்டும் வரும் வெள்ளியன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. தூக்குத் தண்டனை மூலம்

கொலைக்குற்றவாளிகள் தண்டிக்கப்படுகின்றனர். செய்தி அறிக்கைகளின் அடிப்படையில், 20 பேர் கொண்ட ஆடவர் கும்பல் திரு நொராய்டியை பாராங் கத்திகள், கண்ணாடி பாட்டில்கள் மற்றும் நாற்காலிகளால் தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இரு குழுக்களைச் சேர்ந்த ஆடவர்களிடையே முதலில் சிறு விஷயம் தொடர்பில் மூண்ட சண்டை, பின்னர் ஒரு குழுவைச் சார்ந்த ஆடவர்கள் பேரங்காடி அருகில் உள்ள கடையில் ரொட்டி பிராட்டா சாப்பிட்டுக்கொண்டிருந்த போது பெரிய சண்டையாக மாறியதாகத் தெரிய வந்துள்ளது.

Syndicate content
Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838