Thursday, April 12th, 2012
- ஜெயசுதா சமுத்திரன் -(சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தின் அரசியல் அறிவியல், தெற்காசிய கல்வி ஆகிய இரு துறைகளில் பட்டக் கல்வி பயில்கிறார். )
பேஸ்புக்கில் இந்திய இளையர்கள் எதைப் பற்றிப் பேசுகிறார்கள்? ஒரு சில ‘ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்’கள்:
“உன் நினைவில் என்றும் நான். முயற்சித்தாலும் மறக்க முடியவில்லை. இந்த வாழ்க்கையிலும் பொருள் இல்லை.”
“உன்னை என் உலகம் என்றேன். என் உலகத்தையே நொறுக்கிவிட்டு தூசு தட்டி நடந்து சென்றாய்.”
“என் இதயத்தை உன்னிடம் கொடுத்தேன் பத்திரமாக, அதைத் திருப்பித் தந்தாய் வெறும் பாத்திரமாக.”
ஃபேஸ்புக் பதிவுகள்தானே என்று இவற்றைப் பொருட் படுத்தாமல் இருக்க முனைந்தாலும் காற்று வாக்கில் காதில் வந்து சேரும் உண்மைச் சம்பவங்கள் வருத்தமளிக்கின்றன.
எந்தப் பருவத்தில் காதலிக்க வேண்டும் என்ற வாதத்திற்கே நான் வரவில்லை. இளம் பருவத்தில் துளிர்த்த காதல் பத்தாண்டுகளுக்குப் பிறகு முறிவதையும் பார்க்கிறோம், உயர்நிலைப்பள்ளிக் காதலர்கள் பின் நல்லதொரு குடும்பத்திற்குத் தலைமை தாங்கி நிற்பதையும் காண்கிறோம். அவரவர் கையில் உள்ளது அவரவர் காதலைக் கல்விக்குப் பாதிப்பு நேராமல் நிரந்தரமாக்கும் பொறுப்பு.
ஆனால், காதலுறவில் ‘எதையும் சந்திப்போம்’ என்று தைரியமாக இறங்கும் இளையர்களுக்கு காதல் முறிவுகளை ஏற்றுக்கொள்வதற்கு துணிவு மிகக் குறைவாக இருக்கின்றது என்பதே என்னுடைய ஆதங்கம்.
உளமாரக் காதலித்துக் கைவிட்ட காதலியின் நினைவில் நான்காண்டுப் பல்கலைக்கழகப் படிப்பை ஆறாண்டுகளாகப் பயின்று வரும் நண்பரின் கதை. காதல் தோல்வியில் மனமுடைந்து மனதை ஆற்றுவதற்காக புகை பிடித்தல், மது அருந்துதல் என போதையில் இறங்கிய தோழியின் கதை.
இப்படி நம்மில் ஒவ்வொருவருக்கும் சில காதல் தோல்வியினால் சிதைந்த வாழ்க்கைக் கதைகள் தெரியும்.
காதலென்பது உணர்ச்சி சார்ந்தது. இனம்புரியா வகையில் நுண்ணிய இதய நரம்புகளை மீட்டக்கூடியது காதல். இருந்த காதல் இல்லாமல் போகும்போது இதய நரம்புகளே கிழிந்தன போன்ற உணர்வு ஆட்கொள்ளும். இந்நிலையில் எப்படி இயல்பாக இருப்பது என்பது ஒவ்வொரு காதல் தோல்வியுற்ற இளையரின் குமுறல். ஒவ்வொரு தமிழ்த் திரைப்படக் காதல் சோக கீதமும் வலியுறுத்தும் அடிமன அரற்றல்.
என் சொந்த அனுபவத்திலிருந்து சில சிந்தனைத் துளிகள்:
1. கேட்பவரிடமெல்லாம் காதல் தோல்வி பற்றிக் கூறி, கண்ணீர் விட்டு, சோகக் கடலில் உங்களையே மூழ்கடித்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால், உங்கள் முன்னாள் காதலரோ பெரும்பாலான நேரங்களில், விட்டது காதல் என்று படிப்பிலோ வேலையிலோ கவனம் செலுத்திக் கொண்டிருப்பார், அல்லது இன்னொரு காதலரோடு மகிழ்ச்சியாக இருப்பார்.
“காதல் தோல்வியினால்தான் என் படிப்பு கெட்டது, வாழ்க்கை கெட்டது,” என்று கூறுவதில் நியாயம் இல்லை. உங்கள் வாழ்க்கை உங்கள் கையில். ஒவ்வொரு முடிவும் நீங்கள் எடுக்கும் முடிவுகளே. அவருடைய நினைவில் நொந்துகொள்வது என்பது நீங்கள் எடுத்த முடிவு. வாழ்க்கை மகிழ்ச்சியோடு வாழ்வதற்கே என்பது அவர் எடுத்த முடிவு. இருவரில் யாருக்கு லாபம்?
2. மதுவிலும், போதையிலும், கண்ணீரிலும், துயரத்திலும் கழிக்கும் நேரத்தை எப்படியெல்லாமோ பயன்படுத்தலாம். படிக்கலாம், ஆக்ககரமான நடவடிக்கைகளில் ஈடுபடலாம், ஆடலாம், விளையாடலாம், எத்தனையோ நல்ல புத்தகங்களைப் படித்து முடித்திருக்கலாம், எதையாவது சாதித்திருக்கலாம்.
உலகமே நின்று விட்டது என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நொடியிலும், உண்மையில் உலகம் செவ்வனேதான் இயங்கிக் கொண்டிருக்கின்றது. நீங்கள்தான் பொன்னான நேரத்தையும் திரும்பப் பெறமுடியாத இளமைப் பருவத்தையும் சிறுகச் சிறுக வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
காதலில் தோல்வி அடைந்துவிட்டீர்கள் என்பதற்காக வாழ்க்கையிலும் தோல்வியைத் தழுவ நீங்கள் தயாரா?
3. 'எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?' என்று சுய பச்சாதாபத்தில் மூழ்குவதை விடுத்து, வெவ்வேறு வயதைச் சேர்ந்த பத்து பேரிடம் பேசிப் பாருங்கள். ஒவ்வொரு தனிமனிதரிடமும் ஒவ்வொரு சோகக் கதை இருக்கும்.
நம் சோகம் தான் ஆகப் பெரிய சோகமென எண்ணிக் கொண்டிருக்கின்றோம். ஆனால், எப்பொழுது இன்னொருவரது சோகத்தைக் கேட்டுவிட்டு, என் காதல் தோல்வியெல்லாம் இவருடைய பிரச்சினையோடு ஒப்பிடுகையில் ஒரு பிரச்சினையே இல்லை என்று உணர்கிறீர்களோ அப்பொழுது தான் விடிவுகாலம் உங்களுக்கு.
விவாகரத்தான பெற்றோர்கள், பணமுடையினால் வறுமையில் உழலும் குடும்பம், குடும்பச் சுமையைப் பள்ளிப் பருவத்தில் சுமக்கும் மாணவர், சிறு வயதில் கருவுற்று நட்டாற்றில் கைவிடப்பட்ட பெண், இப்படி எத்தனையோ அதிர வைக்கும் உண்மைக் கதைகள் நம் எல்லோருக்கும் தெரியும். இவற்றிலிருந்து மீண்டு வந்தவர்களையும் தெரியும். அவர்களோடு ஒப்பிடுகையில், மனதைத் தொட்டுச் சொல்லுங்கள், உங்கள் காதல் தோல்வியெல்லாம் வாழ்க்கையைப் பாதிக்க வேண்டிய ஒரு விஷயமா?
4. காதல் என்பது வாழ்க்கையின் பல அனுபவங்களுள் ஒன்று. காதலிப்பதற்கு முன் உங்கள் வாழ்க்கை காலியாகவா இருந்தது? சிறிது காலத்திற்கு உள்ளத்தை நெருடிக் கொண்டிருக்கும் முள்ளாகவே இந்தக் காதல் தோல்வியும் சோகமும் பாதித்துக்கொண்டிருக்கும். அந்த முள்ளை எடுத்தெறிவதும், பாதுகாத்துப் பேணுவதும் உங்கள் கைகளில் உள்ளது. முள்ளைப் பிடுங்கி எறிந்துவிடுங்கள், காயத்தில் சிறிது நேரம் ரத்தம் பெருக்கெடுக்கும். பிறகு காலம் அந்தக் காயத்தை ஆற்றிவிடும், தழும்புகளே நினைவுகூறும், இன்னும் சில காலம் கழித்து காயத்தின் அடையாளமே இருக்காது.
5. காதலுறவின் நினைவுகளைப் புரட்டிப் பார்க்கும் போது வலி இருக்கும். ஆனால் வலியையும் தாண்டி பற்பல படிப்பினைகள் இருக்கும். அடுத்த முறை யாரைக் காதலிக்கக் கூடாது, எப்படி நடந்துகொள்ளவேண்டும் இப்படிப் பல பாடங்கள். தேர்வில் தேர்ச்சிப் பெறாதபோது சோகமிருக்கும், ஆனால் தேற்றிக்கொண்டு அடுத்த தேர்வுக்கு பயிற்சியில் தயாராகிறோம். காதல் முறிவிலும் இதைப் பின்பற்றவேண்டும்.
எல்லாம் நல்லதுக்கே என்ற மனப்பாங்கு தேவை. காதலையும் தாண்டிய வாழ்க்கை லட்சியங்கள் தேவை. யோசித்துப் பாருங்கள். ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கும் போது நீங்கள் அனுப்பிவைக்கும் உங்கள் resume ஆவணத்தில் குறைந்த மதிப்பெண்களுக்கும், குறைவான தேர்ச்சிக்கும் உள் குறிப்பாக ‘காதல் முறிவு’ என்று காரணம் கூறமுடியாது.
சிதறிக் கிடக்கும் இதயத் துகள்களைப் பற்றிப் புலம்ப வேண்டாம். மனித இதயம் நாம் எண்ணுவதை விட வலுவானது. நம்புங்கள்.